Skip to main content

திமுக வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும்... அடித்துச் சொல்லும் கனிமொழி எம்.பி!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

 

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க. தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.

 

தென்மாவட்டம் வந்த கனிமொழி, கடந்த நான்கு நாட்களாகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். இன்று தென்காசி மாவட்டத்தின் வடக்கு மாவட்டமான வாசுதேவநல்லூர் பகுதிக்கு வந்த கனிமொழி, புளியங்குடி, ராயகிரி, சிவகிரி போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்களைச் சந்தித்தார். வாசு நகர்ப் பகுதியில் திரண்ட மலைவாழ் பழங்குடியின மக்களிடம் பேசிய கனிமொழி, "காடுகளை நன்றாக வைத்திருக்கும் நீங்கள் அழகர்கள். காடு உங்கள் கைகளில் இருந்தபோது நன்றாக இருந்தது. காடுகளையும் பாதுகாத்தீர்கள். ஆனால், இன்று பல வகையிலும் காடுகள் சூறையாடப்படுகிறது. குறிப்பாக உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு ரேசன் கார்டு, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திற்கும் போராட வேண்டியுள்ளது. நீங்கள் உங்களுக்கான சாதிச்சான்று பெறுவதற்குக் கூட போராட வேண்டியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும் அதனை எளிதாக்குவோம்" என்று பேசினார்.

 

அடுத்து ராயகிரி பகுதியில் பெண்களைச் சந்தித்தார். அதுசமயம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, "கரோனா நேரத்தில் வேலையில்லாமல் சுயஉதவிக் குழு பெண்கள் அவதிப்பட்டார்கள். கடன் வட்டியைக் குறைக்க வேண்டும்" என்றார். அடுத்து தாமரை என்ற பெண்ணோ, "புள்ளைங்க படித்து, பதினோறு வருசமாகுது. வேலை கிடைக்கல. ஏம் படிக்க வைக்கணும்?" என்று கேட்டார்.

 

அதற்குப் பதிலளித்த கனிமொழி, "தாமரை வேலைவாய்ப்பு பற்றிக் கேட்டார். அதற்குக் காரணம் உங்கள் பெயரிலேயே (தாமரை) இருக்கிறது. அந்த ஆட்சிதான் காரணம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், நிச்சயம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். அதேபோல, கர்ப்பிணிப் பெண் நலத்திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவிற்கான குறைந்த வட்டிக்கடன் உதவியும் அளிக்கப்படும்" என்றார்.

 

தொடர்ந்து விவசாயிகளைச் சந்தித்தபோது, "தங்களின் விளைநிலம் வழியாக, நான்கு வழிச்சாலை வரவிருக்கிறது. அதை மாற்றுப்பாதையில் அமையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம் அரசு ஏற்கவில்லை" என்றனர்.

 

cnc

 

விவசாயிகள் 4 வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. விளைநிலங்கள் பாழ்படக்கூடாது. மாற்று வழியில் அமையுங்கள் என்று தானே சொல்கிறார்கள். அதனை இந்த அரசு ஏற்காது. அவர்களின் நோக்கமே அதுதானே. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றார் கனிமொழி. தொடர்ந்து புளியங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழியைச் சந்தித்த சலவைத் தொழிலாளியான விதவைப் பெண் பாப்பாத்திக்கு, வேலைவாய்ப்பிற்கான ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.

 

களை எடுக்கும் பெண்களின் 25 வருட விவசாயக் கடன் மற்றும் அழுத்தும் வட்டிபற்றிய கோரிக்கைக்கு, பத்து வருசமும் எங்க ஆட்சியில்லம்மா. இந்த வருடம் தி.மு.க. ஆட்சி வந்ததும் நிச்சயம் உங்க கவலையும் தீரும், கோரிக்கையும் நிறைவேறும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.