Skip to main content

தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு நிறைவு- விமர்சித்த எடப்பாடி பழனிசாமி! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

dmk govt one year completed admk leader edappadi palaniswamy pressmeet


தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தனது தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிகளவில் இழப்பீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் வறட்சிக்காக முதன்முதலாக நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் 12,51,000 குடும்பங்கள் பயனடைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. 

 

தடையில்லா மின்சாரம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் எந்த புதிய திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க. அரசு. காவிரி, அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க திட்டம் தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் பேரில் நடந்தாய் வாழி காவிரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தது அ.தி.மு.க. அரசு.     

 

குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றினோம். கடந்த ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டு போயுள்ளது. கடந்த 2010- ஆம் ஆண்டு காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்ததும் தி.மு.க. தான், அதை ரத்து செய்வதாக நாடகம் போடுவதும் தி.மு.க. தான். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அம்மா மினி கிளினிக் மூலம் ஏழை மக்களுக்கு மருத்துவம் அளிப்பதைக் கூட தி.மு.க. அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

 

அ.தி.மு.க. ஆட்சியில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை மாநகரில் குற்றங்களைத் தடுக்க அ.தி.மு.க. ஆட்சியில் சிசிடிவி பொருத்தப்பட்டது. அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். அதிக அளவிலான தார் சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டினோம். சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா கொண்டு வந்தது. மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. அரசு" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.