கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் கோதூர் பகுதியில் மாநகராட்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘நம்ம கரூரை பசுமை கரூர் ஆக்குவோம். அடர் வனம் அமைத்தல்’ என்னும் தலைப்பில் மரம் நடும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்து முதல் ஆண்டு முடிவடைந்ததை அடுத்து மரம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் நட்டு பராமரிக்கப்படும் என்றும், ஓராண்டு, ஈராண்டுகளில் மரம் வளர்ந்ததை கண்காணித்து அனைவருக்கும் காட்டப்படும் என்றும், கரூர் மாவட்டத்தில் குறைவான மரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றை அதிகரிக்கும் வகையில் இந்த வனம் உருவாக்கும் பணியினை மேற்கொண்டு இருப்பதாக மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அப்பபோது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேபோல், திருச்சி மாநகராட்சி சார்பில் குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டர் நகர் பூங்காவில் 17632 சதுரஅடி பரப்பளவில் மியாவாக்கி அடர்வனக் காடு உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மேயர் மு.அன்பழகன் இன்று துவங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் கோவிந்தசாமி கவுண்ட நகர் பூங்கா மற்றும் வீன்ஸ் அன்பு அவென்யூ பூங்கா, கணபதி நகர் பூங்கா, சுப்பிரமணிய நகர் பூங்கா, பாத்திமா நகர் அம்மன்நகர் பூங்கா, மற்றொரு கணபதி நகர் பூங்கா, நட்சத்திர நகர் பேஸ்2 பூங்கா ஆகிய 7 இடங்களில் 1 இலட்சத்து 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 24 வகை அடர்வனம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அடர்னனத்தில், புங்கன், வேம்பு, நாவஸ், இலுப்பை, நீர்மருது, பாதாம், இச்சி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் வகையில் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மின்னணுத் திரையில் ஓராண்டு சாதனை விளக்க வீடியோ படக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில், மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.