Skip to main content

எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் ராஜினாமா!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
dmk


திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அவருக்கு மெரீனாவில் இடம் தர மறுத்த எடப்பாடி அதிமுக அரசை கண்டித்து கூட்டுறவு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேர் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சேவகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ஐந்து பேர் நிர்வாகிகளாக வெற்றி பெற்றனர். இதில் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் சத்தியமூர்த்தி இறந்து விட்டார் மீதியுள்ள மாசிலா பெலிப்ஸ், கணேசன், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகிய நான்கு பேர் நிர்வாகிகளாக இருந்தும் கூட பதவி ஏற்பு நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் தான் எடப்பாடி அரசு கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான் வெற்றி பெற்ற திமுகவினர் நான்கு பேர் அப்பகுதியை சேர்ந்த சேவகம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று அந்த திமுக உறுப்பினர்கள் நான்கு பேரும் திடீரென தங்கள் ராஜினாமாவை அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.
 

dmk


இதுபற்றி திமுக உறுப்பினர்களிடம் கேட்டபோது... எங்கள் தலைவர் ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழை வளர்த்து வந்த எங்க தலைவருக்கு இந்த எடப்பாடி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்கி எங்க தலைவரை மெரினாவில் அடக்கம் செய்து இருக்கிறோம். இப்படி தமிழுக்காக உழைத்த எங்க தலைவனுக்கு இடம் தர மறுத்த இந்த எடப்பாடி ஆட்சியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நாங்கள் உறுப்பினாராக இருக்க விரும்பவில்லை என எங்க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.எஸ்சிடம் தெரியப்படுத்தினோம்.

அவரும் சரி என்று சொல்லி விட்டார். அதுனால தான் நான்கு பேரும் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கிறோம் என்று கூறினார்கள். இதே போல் அணைப்பட்டி, நிலைக்கோட்டை, வத்தலக்குண்டு உள்பட பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் இன்றும், நாளையும் ராஜினாமா கடிதம் கொடுத்து எடப்பாடி அரசுக்கு தங்கள் கண்டனத்தை ராஜினாமா மூலம் வெளிப்படுத்த உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.