
முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து முதல்வர் தலைமையில் தொடங்கிய அமைதிப் பேரணி கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த சென்னை மாநகராட்சியின் 146 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான ஆலப்பாக்கம் கு. சண்முகம் இரப்பிற்கு இரங்கலையும், குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.