நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போரட்டத்தை மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன் மாநகரச் செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
போரட்டத்தில் எம்.எல்.ஏ.கள் ஸ்டாலின் குமார், கதிரவன் பழனியாண்டி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் மாத்தூர் கருப்பையா, சேர்மன் துரைராஜ், கதிர்வேல், டோல்கேட் சுப்பிரமணி, சிங்காரம், அம்பிகாபதி செவந்திலிங்கம், கண்ணன், மாநில பொறியாளர் அணி கருணாநிதி மற்றும் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.