Skip to main content

போட்டி வேட்பாளரை களம் இறக்கிய திமுக ந.செ கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

nm

 

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒன்று, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இரண்டு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களிலும், மமக, விசிக தலா ஒருயிடத்திலும், சுயேட்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றனர்.

 

திமுக நகர மன்ற தலைவர் வேட்பாளராக ஏஜாஸ்அகமதுவை அறிவித்தது திமுக தலைமை. இதனை நகரச் செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கழக மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷபீர் அகமதுவை சேர்மன் வேட்பாளராக முன்னிறுத்தினார். நகரமன்ற அலுவலகத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜாஸ் அகமது, சேர்மன் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆம்பூர் ந.செ ஆதரவோடு கவுன்சிலர் தொழிலதிபர் ஷபீர் அகமதுவும் மனுசெய்தார். அப்போது நகராட்சி அலுவலகத்துக்கு எம்எல்ஏ வில்வநாதன், எம்பி கதிர்ஆனந்த் வருகை தந்தனர். எம்.பியும் எம்.எல்.ஏ வும் நகராட்சி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டுமென திமுக ந.செ ஆறுமுகம் தரப்பினர் கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

 

தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியபோது, ஏஜாஸ்அகமத் மற்றும் ஷபீர்அகமத் இருதரப்பிடையே சண்டை ஏற்பட்டது, தேர்தலை நடத்து என ஆறுமுகம் தரப்பு கவுன்சிலர்களும், நடத்தக்கூடாது என ஏஜாஸ்அகமத் தரப்பும் பேப்பர்களை தூக்கிவீசி, தேர்தலை நிறுத்து எனப் பிரச்சனை செய்தனர், தேர்தலை நடத்துங்கள், நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் மல்லுக்கட்டியதால் மாவட்ட ஆட்சியரிடம்மிருந்து வந்த உத்தரவுப்படி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆம்பூர் நகரக் கழக செயலாளர் ஆறுமுகம், கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிர்த்து வேட்பாளராக நின்ற ஷபீர்அகமத் இருவரையும் தற்காலிகமாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஆம்பூர் நகர நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, நகர கழகத்தில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒரு கோஷ்டி, மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன் தலைமையில் ஒரு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ந.செ ஆறுமுகம் தொழிலதிபர் ஷபீர்அகமத்வை சேர்மனாகவும், தன்னை வைஸ் சேர்மனாகவும் முன்னிறுத்தி கவுன்சிலர்களிடம் பிரச்சாரம் செய்தார், தேர்தலுக்கு பணமும் தந்தார்.

 

மாவட்ட அவைத்தலைவர் கோஷ்டி பெரிய கம்பெனி முதலாளியும், சில முதலாளிகளும் இணைந்து திமுக பொதுக்குழு உறுப்பினரான கவுன்சிலர் ஏஜாஸ்அகமத்வை சிபாரிசு செய்தனர். மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ, ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் ஆதரவாக நின்றனர். இங்குதான் பிரச்சனையே உருவானது. நகர கமிட்டி சொல்வதை ஒதுக்கிவிட்டு, தொழிலதிபர் தரப்பு சொல்வதைக் கேட்டு தலைமைக்குச் சிபாரிசு செய்வது எந்த விதத்தில் நியாயம்?, கவுன்சிலர்கள் விரும்பியதால் தலைமை சொன்னதுக்கு மாறாக ஒரு வேட்பாளரை நிறுத்தினோம், கட்சி நிர்வாகியைத்தானே நிறுத்தினோம், அதற்காகக் கட்சியை விட்டு நீக்குவது எந்தவிதத்தில் நியாயம் எனக்கேள்வி எழுப்புகிறார்கள்.

 

மற்றொரு தரப்பு, தலைமையின் உத்தரவை மீறி வேட்பாளரை நிறுத்தியது முதல் தவறு, முதலாளிகளுக்கு ஆதரவாக தலைமை செயல்படுகிறது என்கிற தகவலைப் பரப்பியது பெரிய தவறு, எம்.பி, எம்.எல்.ஏவுக்கு எதிராக குரல் எழுப்பி அவமானப்படுத்தியது போன்றவற்றால்தான் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பவர்கள், ஷபீர்அகமத் பெரிய தொழிலதிபர் அவரை திமுக தொண்டர்கள், கவுன்சிலர்கள் சுலபமாக சந்திக்க முடியாது. அப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும், அதோடு ஆறுமுகத்துக்கு அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவை வாங்கியிருந்தார். இது எல்லாவற்றுக்கும் பணம் முக்கிய பங்கு வகித்தது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.