திருச்சி,தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்தும், பெட்ரோல் - டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மத்தியஅரசின் ஜனநாயக மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.