
கடும் குளிர் பனிக்காலம் விரட்டியடித்து தமிழக அரசியல் களத்தை வெப்பசலனமாக, சூடாக்கிவிட்டது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு. இத்தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த காங்கிரஸ் திருமகன் ஈவேரா சமீபத்தில் மரணமடைந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 4ம் தேதி தான் இத் தொகுதியின் எம்எல்ஏ வான திருமகன் இறந்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்க ஓரிரு மாதமாகும் என அரசியல் கட்சிகள் காத்திருக்க, திருமகன் ஈவேரா இறந்த அடுத்த 14 நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. ஜனவரி 31-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர். சென்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் எண்ணிக்கை இரண்டு லட்சமாக இருந்தது. அப்போது தேர்தலில் 70 சதவீத வாக்காளர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 37 பேர் வாக்களித்திருந்தனர்.
அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற திருமகன் ஈவேரா 67,300 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் த.மா.க வேட்பாளர் யுவராஜ் நிறுத்தப்பட்டு 58,396 வாக்குகள் பெற்றிருந்தார். இருவருக்குமான வித்தியாசம் 8904 வாக்குகள். திமுக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளுங்கட்சியாக ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறும் நேரத்தில் நடத்தப்படுகிற இடைத்தேர்தல் என்பதால் ஈரோடு கிழக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் பெருமையுடன் கூறிவரும் இச்சூழலில் இந்த ஆட்சிக்கான சர்டிபிகேட் தரும் பொறுப்பு இந்த தொகுதி மக்களிடம் வாக்குகளாக உள்ளது.

திமுக கூட்டணியில் சிட்டிங் சீட் என்பதால் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு கேட்கும் என அக்கட்சியின் தலைவர் ஏற்கனவே கூறியிருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்பது ஒரு பெரிய பலம் கிடையாது. தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த அவரது கொள்ளு பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் என்ற பரப்புரை அப்போது மக்களிடம் எடுபட்டது. இப்போது காங்கிரஸில் பலமான வேட்பாளர் யாரும் இல்லை என அக்கட்சியிலே குரல்கள் வெளிப்படுகிறது. ஈ வி கே எஸ் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தேர்தலில் நிற்பதற்கான ஈடுபாடு இல்லாத நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த இளைஞர் அணி ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், கவுன்சிலர் இ.பி.ரவி என ஒரு சிலர் வேட்பாளராக ஆர்வம் காட்டுகிறார்கள். திமுகவை பொறுத்தவரை இங்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்தான் நிறுத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த தொகுதி நிர்வாகிகளும் தலைமைக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்.
கூட்டணி அடிப்படையில் காங்கிரசுக்கு இத்தொகுதியை கொடுத்தால் தேர்தல் முடிவு எதிர்பார்த்தபடி இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அது பல விமர்சனங்களை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு ஒரு பலவீனத்தை உருவாக்கி விடும் அதை தவிர்க்க வேண்டும் என்றால், நேரடியாக இங்கு திமுக களம் கண்டு எதிரணியான அதிமுகவை வீழ்த்தி, அதிக ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுக் காட்டுவோம் என்கின்ற வேகம் உடன்பிறப்புகள் மத்தியில் உள்ளது. சமூக அடிப்படையில் இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் கணக்குப்படி ஈரோட்டு கிழக்கு தொகுதியில் மெஜாரிட்டியாக 90 ஆயிரம் வாக்குகள் முதலியார் சமூகத்தை சார்ந்தவர்கள் உள்ளார்கள். அதற்கு அடுத்து கவுண்டர், வன்னியர், பட்டியல் இனத்தவர் என பிற சமூக வாக்காளர்கள் உள்ளார்கள்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் இத்தொகுதியை எதிர்பார்க்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் மற்றும் சென்ற தேர்தலில் போட்டியிட்ட இளைஞர் அணி யுவராஜ் ஆகியோர் தங்கள் இருப்பை காட்டுகிறார்கள். ஆனால் அதிமுக தான் இங்கு போட்டியிட வேண்டுமென மாஜி எடப்பாடி பழனிசாமி சென்ற சில நாட்களுக்கு முன்பே அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கத்திடம் கூறியதோடு "ராமலிங்கம் நீங்க தான் வேட்பாளர் வேலையைப் பாருங்கள்" என உத்தரவு போட்டுள்ளார். அடுத்த நாளிலிருந்தே தேர்தல் பணியைத் தொடங்கியதோடு பூத் கமிட்டிக்கு 5000 என அதிமுக தரப்பில் பட்டுவாடாவும் முடிந்து விட்டது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால் அதிமுக தரப்பில் சுறுசுறுப்பு காணப்படுகிறது. ஏற்கனவே இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அ.தி.மு.க. தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார் மற்ற அதிமுக நிர்வாகிகளும் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் இருக்கிறார்கள். ஏறக்குறைய அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தான் என உறுதியான நிலையில் நேரடி ஃபைட்டாக அடுத்து திமுக தான் தனது வேகத்தை இங்கு காட்ட வேண்டும்.
Follow Us