Skip to main content

தேமுதிக தேய்ந்த பின்னணி!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

"அரசியலில் கொஞ்சம்  ‘முன்ன பின்ன’ இருக்கத்தான் செய்யும். ஆனால், பேச்சில் சுத்தம் இருக்கணும். அதெல்லாம் எங்க கேப்டனோட போச்சு. இப்ப கட்சியில அண்ணியார் எடுக்கிற முடிவால் ரொம்ப ரொம்ப  பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்று   நம்மிடம் ‘உச்’ கொட்டினார் விருதுநகரைச் சேர்ந்த ஒரு தேமுதிக நிர்வாகி. தான் சொல்வதில் நியாயம் இருப்பதாகக் கூறினார். 

 

dmdk Worst background



அவருடைய கணக்கு பிரகாரம் பார்ப்போமே!

2009-நாடாளுமன்ற தேர்தலில் தனித்து  நின்று 10 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது தேமுதிக.  தற்போது அதிமுக, புதிய தமிழகம், பாமக, பிஜேபி, சமத்துவ மக்கள் கட்சி என பெரிய படை பலத்தோடு, அதிமுக வாய்ஸில் சொல்வதென்றால் மெகா கூட்டணி அமைத்து நின்றது. ஆனால்,  2.19 சதவீத வாக்குகள் மட்டுமே தேமுதிக வேட்பாளருக்கு கிடைத்திருக்கிறது.

 

தே.மு.தி.க சந்தித்த 5-வது தேர்தல் களம் இது. 2005-ல் உதயமான தேமுதிக, முதன் முறையாக 2006-ல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்கில் 8.33 சதவிகிதம். 

 

dmdk Worst background



பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில். தனித்து நின்றது தே.மு.தி.க.  பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 ஓட்டுகள் வாங்கியது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும். 

 



மொத்தத்தில் அந்தத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது தேமுதிக.  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், சேலம், திருவள்ளூர், ஆரணி, தருமபுரி, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது கேப்டனின் தேமுதிக கட்சி. 

 



தேமுதிக பிரித்த வாக்குகளால்,  அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 11 தொகுதிகளிலும், பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனும் தோல்வியைத் தழுவினர். வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோரை அப்போது நாடாளுமன்றத்திற்குச் செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்களிப்பு அதிகம். 

 

dmdk



விருதுநகரில் போட்டியிட்ட வைகோ வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்  மாஃபா பாண்டியராஜன் 1,25,229 வாக்குகள் பெற்றார்.  மாஃபா பாண்டியராஜன் தற்போது அதிமுகவில் இருப்பதெல்லாம் தனிக்கதை. 

 



2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. இதில் திருப்பூரில் 2-வது இடத்தையும், மற்ற தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது அந்தக் கட்சி. மொத்தம் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது 2009-தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதிதான். 

 



தற்போது,  அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக,  நான்கிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மொத்தம் உள்ள  4 தொகுதிகளிலும் சேர்த்து 9,29,590 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. இது பதிவான மொத்த வாக்கு சதவிகிதத்தில் 2.19 சதவீதம் ஆகும். ஆக,  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக,  தேமுதிகவின் வீழ்ச்சியானது,  10 ஆண்டுகளில் 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்திருக்கிறது.  இதைக் கணக்கிடும்போது,  2009 தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டதையும், தற்போது 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

dmdk Worst background



தேர்தலுக்கு முன்பாக,  அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது வாடிக்கையானதுதான். ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதும் இயல்பானதுதான். அந்த வகையில்,  தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு திமுக விரும்பியது. ஸ்டாலினும் விஜயகாந்த் வீட்டிற்குப் போய் நலம் விசாரிப்பது போல், சுதீஷை சந்தித்துப் பேசினார். 

 



அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "விஜயகாந்த் எனது நண்பர், அவரது உடல் நலம் குறித்து மட்டுமே விசாரிக்க வந்தேன்" என்று  தெரிவித்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேர முயற்சி செய்த பிரேமலதா, எங்கே அதிமுக தங்களைக் கூட்டணியில் சேர்க்க விடாமல் போய்விடுமோ என்ற பயத்தில், " ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டது" என்றார் பட்டவர்த்தனமாக. 

 

dmdk Worst background

 

இதற்கிடையே, அதிமுக பிடி கொடுக்காமல் இருந்ததால், தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான அனகை முருகேசன் உள்ளிட்டோரை துரைமுருகன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார் சுதீஷ். ஒருபக்கம் பா.ஜ.க. கூட்டணியுடன் பேச்சு. மறுபுறம் துரைமுருகன் வீட்டிற்கு ஆள் அனுப்பியது என டபுள் கேம் ஆடிய தேமுதிகவின் வண்டவளத்தை துரைமுருகன், தமக்கே உரிய பாணியில் ஊடகங்களிடம் போட்டு உடைத்தார். இந்தக் கோபத்தை ஊடகங்களிடம் காட்டினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. அன்றைய பேட்டியின்போது "நீ, வா, போ, உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது..." என பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது எல்லாம் ஊடகங்களிலும் வெளியானது. 

 

dmdk Worst background



பிரேமலதாவின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கள்தான்,  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.  கள்ளக்குறிச்சி தேமுதிகவுக்கு செல்வாக்கான தொகுதி.  அங்கு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுதீஷை திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி வென்றிருக்கிறார். அதேபோல், 2009-ல் விருதுநகரில் தனித்து நின்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற தேமுதிகவால், தற்போது கூட்டணி பலத்தோடு நின்றும் வெற்றி பெறமுடியவில்லை. 

 

 



மொத்தத்தில்  அந்த நிர்வாகி கூறிய கணக்கு சரியாகவே இருக்கும் நிலையில், “வீழ்ச்சிக்குக் காரணம் -  தேமுதிக மீதும்,  அதன் கூட்டணி மீதும் மக்கள் வைத்திருக்கும் வெறுப்பு  அரசியலே! இதை பிரேமலதா.. ஸாரி..  அண்ணியார் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார், அவர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

'அன்று அமலாக்கத்துறை; இன்று என்சிபி; பாஜக அரசியல் எடுபடாது'- அமைச்சர் ரகுபதி பேட்டி 

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
'BJP has abandoned the anti-narcotics unit' - Minister Raghupathi interview

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி, ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திரைப்படங்களை எடுப்பதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தற்பொழுது வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் என்சிபி அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கிறார்.

என்சிபி அதிகாரியின் பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கி பிடிக்கலாம் என நினைக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்த என்சிபி, 21ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றபோது கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவிற்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது.

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டே  அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்பொழுது பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாபர் சாதிக்கிற்காக ஆஜராகி உள்ளார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. திமுக அரசுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப்பொருள் மாநிலம் போல் சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.

நாட்டிலேயே அதிகமாக போதைப்பொருள் கடத்துவது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்த உடனேயே ஜாபர் சாதிக்கை உடனடியாக திமுகவிலிருந்து நீக்கி விட்டோம். பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது''என்றார்.