Skip to main content

“ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு கருத்துச் சொல்கிறேன்!” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

DMDK Preamalatha vijayakanth visit cuddalore

 

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, இன்று (டிச.9) சிதம்பரம் வருகை தந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.


பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 'தானே', 'நீலம்', 'கஜா', 'நிவர்' தற்போது 'புரவி' புயல் எந்தப் புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவைக் கொடுத்துச் செல்கிறது. டிசம்பர் மாதம் என்றாலே அழிவு என்று அர்த்தம் புரிகிறது. எந்தப் புயலாக இருந்தாலும் முதலில் தே.மு.தி.க களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடும். 

 

சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் உள்ளிட்ட  பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மக்களை சந்தித்து தே.மு.தி.க சார்பில் நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அனைத்துப் பிரச்சனைகளும் நாம் தீர்க்க முடியாது, இருந்தாலும் எங்களால் முடிந்ததை செய்கிறோம். ஆனால், ஆளுங்கட்சியினர் கவனத்திற்குக் கொண்டு சென்று மக்களுக்குத் தேவையானதைப் பெற்றுத்தரும் இயக்கம் தே.மு.தி.க. 


மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். புயல் தவிர்க்கமுடியாதது. கடலோரம் உள்ளதால் இந்த கடலூர் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. தானே புயல் பாதிப்பின்போது நமது கேப்டன் விஜயகாந்த், கிராமம் கிராமமாகச் சென்று ஆறுதல் கூறினார். கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆனால், அரசு எந்தவித உயிர் சேதமும் இன்றி நல்ல நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகிறோம். 

 

DMDK Preamalatha vijayakanth visit cuddalore


வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு, இரு தரப்பும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும். இதுவரை ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடந்து பிடிவாதமாக இருப்பதால், பேச்சுவார்த்தை முறிந்துவிடுகிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக நான் உணர்கிறேன்.


பஞ்சாபில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருப்பதால் இந்த விவசாயிகள் பின்னணியில் கார்ப்ரேட் கம்பெனிகள் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்றார். 


ரஜினிகாந்த், அ.தி.மு.க கூட்டணி ஏற்படும் சூழல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்குப் பதில் அளித்த பிரேமலாதா, “ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும், கட்சியின் பெயரை கூறட்டும், தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும், பிறகு எங்கள் கருத்தைக் கூறுகிறேன்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.