Skip to main content

போனஸ் இல்லா தீபாவளி; களையிழந்த நகை விற்பனை!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

DIWALI FESTIVAL PEOPLES  JEWELLERY SHOPS SALES

 

கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய இழப்பு மட்டுமின்றி போனஸூம் கிடைக்காமல் போனதால் தீபாவளி நேரத்தில் நகை வியாபாரமும் உற்சாகத்தை இழந்தது. நடப்பு ஆண்டு பண்டிகைக்கால தங்கம், வெள்ளி நகை விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் சரிந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கரோனாவால் உலகமே முடங்கி இருந்த நிலையிலும் கூட அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

 

கரோனாவுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது. படிப்படியாக உயர்ந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில் 44 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.

 

கையில் கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் தங்கத்தில் முதலீட்டைக் குவித்தனர். பவுன் விலை 60 ஆயிரம் ரூபாய் வரை எகிறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததும், புதிய முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் பணத்தை கொட்ட காரணமாக அமைந்தது. இதனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நகைகளின் விற்பனை கணிசமாக அதிகரித்தது. 

 

அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக இறங்கத் தொடங்கியது. பவுன் 38 ஆயிரம் முதல் 39 ஆயிரம் ரூபாய் வரை நிலை கொண்டிருந்த நிலையில், முதன்முதலாக நவ. 19- ஆம் தேதி, 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது.

 

சேலம், தங்க நகை வர்த்தகத்தில் தனித்துவமாக விளங்குகிறது. தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம், பண்டிகைக்கால விற்பனை குறித்து சேலம் தங்க நடைக்கடை உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் பேசினர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய நகைக்கடைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல், அட்சய திருதியை, முகூர்த்த காலங்களில் தங்க நகை விற்பனை வழக்கத்தை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.

 

கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டில் பெரும்பாலான காலக்கட்டங்கள் ஊரடங்கிலேயே கழிந்து விட்டன. பல தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிகர்கள் ஊரடங்கைக் காரணம் காட்டி விற்பனை ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் தர முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு தீபாவளி போனஸூம் வழங்கப்படவில்லை.

 

போனஸ் தொகையைக் கொண்டு புது துணிமணிகள், நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், போனஸ் இல்லாததால் நகை வாங்க அவ்வளவாக இந்தாண்டு ஆர்வம் காட்டவில்லை. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 30 சதவீதம் வரை தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. வரும் காலங்கள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைக்கடை உரிமையாளரைத் தாக்கி நகைகள் கொள்ளை!  சிசிடிவியில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்!  

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
beaten the jewelry store owner and steal jewelry

நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து உரிமையாளரைத் தாக்கி  மிரட்டிய கொள்ளையர்கள்,  ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த மொத்த  நகைகளையும் சுருட்டி ஓட்டம் பிடித்துள்ளனர்.  ஹைதராபாத்தில் உள்ள அக்பர் பாக் பகுதியில் முகமது உக் ரஹ்மான் என்பவர் கிஸ்வா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.   

14-ஆம் தேதி நண்பகலில்  முகத்தில் மாஸ்க், தலையில் ஹெல்மெட்  அணிந்தபடி,  ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர்,   வாடிக்கையாளர்களைப்  போல் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கடைக்குள்  நுழைந்தனர். அப்போது  முகமது உக் ரகுமானின் மகன் கடையில் இருந்தார். கத்தியைக் காட்டி அவரை மிரட்டி,  கடுமையாகத் தாக்கிய கொள்ளையர்கள்,   ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த 150 கிராம் எடையுள்ள மொத்த  ஆபரணங்களையும் பெரிய பை ஒன்றில் அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு  அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  அவர்கள் சென்றபின் கொள்ளைச் சம்பவம் குறித்து  முகமது உக் ரஹ்மானின்  மகன் தன்னுடைய தந்தைக்கு தகவல் அளித்தார்.  

முகமத் உக் ரஹ்மான்  தொலைபேசி மூலம் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த  போலீசார் வழக்கு பதிவு செய்து,  கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராக்களில் பதிவான  காட்சிகளைக்  கைப்பற்றி,  தப்பிச் சென்ற  கொள்ளையர்கள் மூன்று பேரையும் தீவிரமாகத்  தேடி வருகின்றனர். பகல்  வேளையில் பலர் நடமாடும் பகுதியில் ஹைதராபாத்தில் இக்கொள்ளைச்  சம்பவம் நடந்துள்ளது.  

Next Story

நகைப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
A terrible fire in a jewelry box factory

கோவை மாவட்டம், மதுக்கரை அறிவொளி நகர்ப் பகுதியில், தங்க நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆலையில் இன்று (08-02-24) திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர தீ விபத்தால், இந்த ஆலை முழுவதும் சேதம் அடைந்தது.

ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்குள்ள தொழிலாளர்கள் அந்த ஆலையை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால், எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கோவை புதூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விபத்தின் போது சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.