District Education Officer passed away in Collector's Office

பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அலுவலராகப் பணியிலிருந்தவர் சுப்பிரமணியன் (56). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர். நேற்றைய தினம் தென்காசி புதிய கலெக்டராக ஆகாஷ் பொறுப்பேற்றார்.

Advertisment

மரியாதை நிமித்தமாக கலெக்டரைசந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு கலெக்டர் அலுவலகம் வந்த சுப்பிரமணியன் பார்வையாளர் பகுதியில் காத்திருந்தார். அதுசமயம் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதைக்கண்டு பதறிப்போன அரசு அலுவலர்கள் அவரை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

தகவல் போய் விரைந்து வந்த தென்காசி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்வி மாவட்ட அலுவலர் மரணமடைந்தது ஆட்சியர் அலுவலகத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியது.