மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழக்கு; பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு..! 

District Collector's Office Case

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக, குத்தகைக்கு எடுக்க உள்ள கோவில் நிலத்தை, சுதந்திரமாக மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் பெயரை பரிந்துரைக்க பாரத ஸ்டேட் வங்கியை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகம் அமைக்கவீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 34 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிலத்தை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கும்படிகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (08.04.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குழுவின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், கோவில் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் விற்பனை விலை அடிப்படையில் செண்ட்டுக்கு 36 ஆயிரத்து 850 ரூபாய் வீதம், 34 ஏக்கருக்கு12 கோடியே 82 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, அதில் 0.12 சதவீதமான 1.60 லட்சம் ரூபாய் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் கணக்கீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், அப்பகுதியில் கடைசியாக ஒரு செண்ட் நிலம் 3.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளதால், 34 ஏக்கர் கோவில் நிலத்துக்கு 133 கோடி ரூபாய் சந்தை விலை எனவும், அதில் 0.2 சதவீதமான 66 லட்சம் ரூபாயை மாத வாடகையாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நீதிமன்றம் நியமித்த குழுவும், மனுதாரரும் அளித்த கணக்கீட்டில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால், கோவில் நிலத்தை மதிப்பீடு செய்ய சுதந்திரமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனதெரிவித்த நீதிபதிகள், பாரத ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைத்து, வங்கி துணை பொது மேலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

highcourt kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe