திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நகரங்களில் வங்கிகள் கூட செயல்பட முடியாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மை உத்தரவு மூலம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் மத்திய – மாநில அரசுகள் கடைகள், தொழிற்சாலைகள் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வரைமுறை செய்து கடைகள், தொழிற்சாலைகள் திறக்க அனுமதி வழங்கலாம் என அறிவித்தது.
அதன்படி திருப்பத்தூர் நகரம், வாணியம்பாடி நகரில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கடைகள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறையுடன் இவைகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் அறிவுரைகளை மீறினால் சம்மந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என வாணியம்பாடி நகர வணிகர்கள் வாணியம்பாடி கோட்டாச்சியரிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மே 7ந்தேதி முதல் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நகரில் கடைகள் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கலாம் என்றும், மதியம் 1 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் ( மருந்துக்கடை தவிர ) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு அதன்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.