Skip to main content

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்; விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

Disruption when cleaning the water tank; Two workers passes away in poison gas

 

கிருஷ்ணகிரியில், பழைய தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 

தர்மபுரியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் பழைய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், ஜன. 28ஆம் தேதியன்று, அந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, புதுப்பிக்கும் வேலைகள் நடந்தன. கட்டிகானப்பள்ளி அருகே உள்ள கீழ் புதூரைச் சேர்ந்த வெங்கடாசலபதி (40), முருகன் (55), சத்யசாய் நகரைச் சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய கட்டடத் தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

 

அந்தத் தொட்டி 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இந்தத் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் மூவரும் வேலை செய்துகொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் மூவரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உள்ளே எட்டிப் பார்த்தபோது 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிக் கிடப்பது தெரிய வந்தது. 

 

இதுகுறித்து உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

அவர்களைப் பரிசோதனை செய்ததில், பெரியசாமி, முருகன் ஆகிய இருவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. வெங்கடாசலபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், நீண்ட காலமாக பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விஷ வாயு உற்பத்தி ஆகியுள்ளது. தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள், விஷ வாயுவை சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.