Published on 07/06/2022 | Edited on 07/06/2022

ஊராட்சி மன்ற நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரைப் பதவி நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு கோட்டைமேடு ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட, தி.மு.க.வைச் சேர்ந்த சர்மிளா, பல்வேறு பணிகளுக்கான நிதியில் தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்ததாக கருப்பசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, வாடிப்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கிராம நிதி பதிவேட்டைத் தணிக்கை செய்தனர். அதில், ரூபாய் 10 லட்சம் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.
இதனையடுத்து, சர்மிளாவைப் பதவி நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.