தகாத வார்த்தைகளில் திட்டிய கல்லூரி முதல்வரால், தற்கொலைக்கு முயன்ற மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது மகள் ஷர்லிபிரமில்டா, நெல்லை மாவட்டம் திடியூர் அருகே உள்ள PSN கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த வருடம் +2-ல் 450க்கு மேல் மதிப்பெண் எடுத்ததால், எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தங்களது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக, தற்போது புகாருக்குள்ளான கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவியை, கல்லூரி முதல்வர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, அலுவலகம் இருந்த முதலாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் இடுப்பு மற்றும் காலில் எலும்புகள் உடைந்து, தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்தும், தற்கொலை முயற்சி குறித்தும் முன்னீர்பள்ளம் காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை சந்தித்து கேட்டபோது அவர் கூறியது; “பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் கட்டணம் எதுவும் வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த கல்லூரியில் என்னை சேர்த்தார்கள். ஆனால், முதல் செமஸ்டர் முடிந்ததும் ஹாஸ்டல் கட்டணம் என 18 ஆயிரம் ரூபாயும் செமஸ்டர் ஃபீஸ் என 5 ஆயிரம் ரூபாயும் பணம் கட்ட சொன்னார்கள். என்னால் முடியாது என்று சொன்னேன். என்னை இந்த கல்லூரியில் சேர்ப்பதற்கு அனுமதி அளித்த ஆசிரியரை அழைத்துவரச் சொன்னார்கள். ஆசிரியர் கூறியதன் அடிப்படையில் அப்போது அந்த பிரச்சினை ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா என்பவர் என்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்தார். எனது செல்போன் நம்பரை கேட்டார். என்னுடன் செல்போனில் பேசினால் கல்லூரிக்கான பீஸ் ஏதும் கட்டவேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறினார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அப்போதைக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்தார். அடுத்த சில நாட்களில் மீண்டும் சிவா மூலம் எனக்கு தொந்தரவு தொடங்கியது. கல்லூரியில் மற்ற சகோதரரிடம் பேசுவதைக் கூட, தவறாக என்னை சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் சிவா பேசியுள்ளார்.
கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா சொன்னதைக் கேட்டு, பாலியல் ரீதியாக தவறாக சித்தரித்து, தகாத வார்த்தைகளால் என்னை கல்லூரி முதல்வர் திட்டினார். ஏற்கனவே கல்லூரி கட்டணம் கட்டாததை காரணம் காட்டி பேசிய முதல்வர், தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்து கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தேன். எனது இந்த நிலைமைக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் உதவியாளர் சிவா இருவருக்கும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.