Skip to main content

வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தைப் பாதுகாத்திட சென்னையில் கலந்துரையாடல்! 

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
bk

 

வன்கொடுமை தடுப்பு(திருத்த) சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும், அத்தீர்ப்பை திரும்பப் பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் 28-5-2018 அன்று காலையில் சென்னையில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் பட்டியலின, பழங்குடி அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்திற்கு பி.சம்பத் (மத்தியக்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார். கே.சாமுவேல்ராஜ் (மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி) வரவேற்புரையாற்றினார். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூட்டத்தின் நோக்கங்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். இக்கூட்டத்தில் வன்னியரசு(விசிக), கு.ஜக்கையன் (ஆதி தமிழர் கட்சி),  நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), மா.ப.வர்கீஸ்(மக்கள் புரட்சி கழகம்),  ஏர்போர்ட் தா. மூர்த்தி(புரட்சி தமிழகம்), மு.மதிபறையனார்(அம்பேத்கர் மக்கள் படை), சைதை அன்புதாசன்(டாக்டர் அம்பேத்கர் பேரவை), இரா. சத்தியசீலன் (அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி), கோ.நீலமேகம்(புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை), மு.குணாளன்(தமிழ் மாநில குடியரசு கட்சி), எஸ். சசிகுமார்(அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி), ஏ.ஜி. பிரகாஷ் (அகில இந்திய ஆதி திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம்), எம். கவுதமன்(தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி),  சேவாரத்னா சி.ராஜேந்திரன்(குடிசை வாழ் மக்கள் முன்னேற்றக்கழகம்), கே. சரவணன்(ஜெய் அம்பேத்கர் நலச்சங்கம்),  பொ.இராஜேந்திரன்(அம்பேத்கர் மக்கள் சக்தி), யு.கே. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி) ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

 

இந்தியச் சமூகத்தில் சமூக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு கடுமையாக ஆளாகுபவர்களாக பட்டியலின, பழங்குடியின மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். தீண்டாமைக்கொடுமைகள், பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் என பன்முகத்தாக்குதல்களை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கால ஓட்டத்தில் இத்தாக்குதல்களின் வடிவங்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றனவே தவிர ஒடுக்குமுறைக்கான இலக்குகளாக அவர்கள் தொடர்வது மாறவே இல்லை.

இத்தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும், இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் வென்றெடுத்தனவேயாகும். * 1955ல் தீண்டாமை ஒழிப்புச்சட்டம்  * 1975ல் குடிமை உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் *     1989-ல் பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம்  * 2016ல் பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு (திருத்தச்) சட்டம் இத்தகைய வரலாற்றைக் கொண்ட இச்சட்டத்திற்குப் பெரும் பின்னடைவை 20-3-2018 அன்று டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் (எதிர்) மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கில் (5661/2017) உச்சநீதிமன்றத்தின் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு ஏற்டுத்தியுள்ளது. இத்தீர்ப்பு பட்டியலின, பழங்குடி மக்களின் அரசியல், சமூக, பொருளியல் உரிமைகளுக்கு விரோதமானது. 2015ல் வலுப்படுத்தப்பட்ட வன்கொடுமை தடுப்பு (திருத்தச்)சட்டம் இன்னும் முழுமையாக அமலுக்கு வராத நிலையில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இக்கூட்டம் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

*     உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாகத் திரும்பப் பெறப்படுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, திருத்தச்சட்டம் அமலாவதை உறுதி செய்ய வேண்டும். 
*     வன்கொடுமைத் தடுப்பு(திருத்த) சட்டத்தை அரசியலமைப்புச்சட்டத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.
*     வன்கொடுமைகள் உரிய வகையில், உரிய வேகத்தில் தண்டனைக்கு ஆளாகிற வகையில் நாடு முழுமையும் சிறப்பு நீதிமன்றங்கள், சிறப்பு வழக்குரைஞர் நியமனங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட வேண்டும்.
கீழ்க்காணும் போராட்ட திட்டங்களை இக்கூட்டம் முடிவு செய்கிறது. 

1.     மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி ஜூலை 2-ஆம் நாள் தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த போராட்டம் நடத்துவது.

2.     இப்போராட்டத்திற்கான ஆயத்தமாக  1. சென்னை, 2. நாகை, 3. மதுரை, 4. கோவை ஆகிய மையங்களில் போராட்ட சிறப்பு மாநாடுகளை நடத்துவது எனவும், இம்மாநாடுகளில் தலித், பழங்குடி அமைப்புகளையும் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

3.     மேற்கண்ட பணியினை திட்டமிடவும், கிராமங்கள், நகரங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்திடவும், எல்லா மாவட்டங்களிலும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் தலித் பழங்குடி அமைப்புகள் மற்றும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்களது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இம்முடிவுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்திட அனைத்து அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அனைத்துப்பகுதி மக்களும் ஆதரவளிக்கவும் வேண்டுகிறோம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார். 

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.