Skip to main content

ஊரணிக்கரையில் புத்த சமயச் சின்னமான தர்மசக்கரத் தூண் கண்டுபிடிப்பு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Discovery of the Dharmachakra Pillar, a Buddhist symbol, at Oranikarai.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புதுவாக்காடு ஊரணிக்கரையருகே நிலத்தை சீர் செய்யும் போது தர்மசக்கர புடைப்புச் சிற்பத்துடன் தூண்கல் வெளிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும் புதுவாக்காடு கிராம இளைஞர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்திற்கு தகவலளித்தனர். தூண் புடைப்பு சிற்பம் புத்த சமயத்தில் மிக முக்கியச் சின்னமாகக் கருதப்படும் தர்மசக்கரம் என்பதை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். 

 

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, “தர்மசக்கரம் அல்லது அறவாழி என்பது புத்தம், சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கியச் சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள தர்மசக்கரம் எட்டு ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போல பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தாங்கிப்பலகையில் சக்கரத்திற்கு அடிப்புறத்தில் தெளிவற்ற மான் உருவம் இருமருங்கிலும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக்கிறது. இது புத்த தர்மசக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும், சக்கரத்தின் மேற்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவச் சக்கரங்களில் இந்த தீச்சுவாலை அமைப்பு மூன்று புறங்களில் காட்டப்படும். புடைப்பு சிற்பத்தில் மேற்புறம் மட்டும் காட்டப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தூண் புடைப்பு சிற்பத்தில் தெளிவான கால வரையறையைக் கொண்ட எழுத்து பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும், ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினொன்றாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாகக் கருதலாம். 

 

தர்மசக்கரத்தின் எட்டு ஆரங்கள் சொல்லும் தத்துவம் என்னவெனில், சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பார்வை, சரியான முயற்சி, சரியான கவனம், சரியான நோக்கம், சரியான நினைவாற்றல், சரியான செயல், சரியான பேச்சு என்பதாகும். புத்தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில் ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சி முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையிலே தர்மசக்கரத்தின் இருபுறமும் மான்கள் காணப்படுவதுண்டு. 

 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்மசக்கரத் தூண் நீர் நிலைக்கு அருகில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர்நிலையை ஏற்படுத்தியவர்களால் நட்டுவிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது. மேலும், இது போன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளைக் குறிப்பதற்கும், தாம் செய்வித்த பொதுப்பணியை எந்நோக்கத்திற்காகச் செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது.  இது பௌத்த துறவிகள் அல்லது அந்த மதத்தைப் பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

 

கடற்கரை அருகிலான கிராமமாக இது இருப்பதோடு, ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்திலும், மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டிணம் எனும் ஊரிலும் புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ஜெ.ராஜாமுகமது அவர்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டு காணாமல் போன புத்தர் சிற்பம் கண்டறிந்த இடமும், கடலோர இலங்கைத்தீவும் அண்மைப் பகுதிகளாக இருப்பதால் பௌத்தம் இப்பகுதியில் பரவியிருந்ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பைக்  கருத முடிகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அலட்சியம் காட்டிய நகராட்சி; பரிதாபமாக பிரிந்த பெண் இன்ஸ்பெக்டரின் உயிர்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Woman inspector passed away due to unidentified speed breaker.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி  சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர். 

இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

Woman inspector passed away due to unidentified speed breaker

இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.

ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.