Discovery of ancient sewage pipe in Panangudi like Keezhadi

சிவகங்கை மாவட்டத்தில் பழமையான தொல்லெச்சங்கள் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், பனங்குடிப் பகுதியில் பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ஓடுகள் கிடைப்பதாக பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார்,பாண்டியன் இளங்கோ, முத்தரசு ஆகியோர் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர் இரா.நரசிம்மன் துணைச் செயலாளர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில் மேற்பரப்புக்கள ஆய்வு செய்தனர்.

Advertisment

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, 'பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய்க் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்பணியின் பின்பு அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் பொழுது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர்கள் பெரியவர்களிடம் காண்பித்துள்ளனர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஊர்க்காரர்கள் இது ஏதாவது பழமையான ஓடாக இருக்கும் என்ற அளவில் விட்டுவிட்டனர். இந்நிலையில் நாங்கள் அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம். இங்கு காணப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாக கோர்வையாக அடுக்கி படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பாக ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது. இதுபோன்ற கழிவுநீர்க் குழாய் அமைப்புகள் சிந்துச் சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க் குழாய்கள் காணக் கிடைக்கின்றன.

கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க்குழாய்களை விட இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும் மாறுபட்டதாகவே தெரிகிறது. பனங்குடி மயிலாடும் போக்கு கண்மாயை அடுத்து சுமார் 15 ஏக்கருக்கு பானை ஓடுகள் பரந்து விரவிக் கிடக்கின்றன. இதில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மேலும் வட்டச்சில் எச்சங்களை கண்டெடுத்தோம்‌.

Advertisment

பரந்து விரிந்து கிடக்கிற பானை ஓடுகளைக் கொண்டும் குழாய் வடிவத்தில் கிடைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் பிற தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குழாய் அமைப்பைக் கொண்டும் இது வாழ்விடப் பகுதி என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களையும் காண முடிகிறது‌. அந்த கல் வட்ட எச்சங்களுக்கிடையே முதுமக்கள் தாழி பானை ஓடுகளும் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.

இவ்விடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் பேசிய பொழுது மாவட்ட நிர்வாகம் வழியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .இது குறித்து கிராம மக்களிடையே தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம்' என்றார்.