நடிகர் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நடந்தது. கமல்ஹாசனுடன் நடித்த நடிகர், நடிகைகள், பிரபலங்கள், உடன் பணியாற்றியவர்கள் வருகை தந்திருந்தனர். இந்த விழாவில் ரஜினி, இளையராஜா, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மனிஷா கொய்ராலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், இயக்குநர் சேரன், இயக்குநர் அமீர் பிரபு, வடிவேலு, சரத்குமார், எஸ்.ஏ.சி, விக்ரம் பிரபு, கார்த்தி, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

Advertisment

sankar

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேசும் போது, "கமல் சார் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளைத் தனது நடிப்பு வாழ்க்கையில் பேசியுள்ளார். முதல் முறையாக 'இந்தியன் 2' படத்தில் அவர் குஜராத்தி மொழி பேசுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது. படத்தில் உங்களுக்கென பல ஆச்சரியங்கள் உள்ளன. நான் எடுத்ததில் சிறந்த படம் ’இந்தியன்’ தான் என பலரும் இதுவரை என்னிடம் கூறி வருகின்றனர். தற்போது, 20 வருடங்கள் கழித்தும், கமல் சார் சேனாபதி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடிக்கிறார். தனது மொத்த உடல், படப்பிடிப்புத் தளம், கிராபிக்ஸ், கேமரா கோணம் என எல்லாத்தையும் உள்வாங்கிக்கொண்டு 360 டிகிரி நடிப்பைத் தருகிறார்.ஐந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கேமராவை வைத்தாலும் கூட அவரால் அதற்கு ஏற்றார் போல சரியாக நடிக்க முடியும். குறிஞ்சிப் பூ 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வருவார். கமல்ஹாசன் போன்ற அற்புதமான நடிகர்கள் 60 வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்” என்று பேசினார் இயக்குநர் ஷங்கர்.