Skip to main content

சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தை ஆய்வு செய்த செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்!

Published on 27/03/2022 | Edited on 28/03/2022

 

Director of Press and Public Relations inspects Swami Sahajananda Mani Mandapam

 

சுவாமி சகஜானந்தா ஆரணி அடுத்துள்ள மேல் புதுப்பாக்கம் எனும் சிற்றூரில் 1890- ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27-ம் நாள் ஆதிதிராவிடர் சமூகத்தில் பிறந்தார். அவர் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் மிக்கவராக இருந்து, தனது சமூக மக்களின் நலனுக்காக அரசியலிலும் ஈடுபட்டார். தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பட்டியல் சமூக மக்களுக்கு உரிமைகளையும், நிவாரணங்களையும் பெற்றுத் தந்துள்ளார்.  

 

சுவாமி சகஜானந்தா சமூக அக்கறை கொண்டவர்.  இவரது அயராத உழைப்பாலும் மற்றும் பலரது போராட்டங்களிலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக ஏழை மக்களும் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையில் நந்தனார் கல்வி கழகத்தை நிறுவி விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். சுவாமி சகஜானந்தர் 1959- ம் ஆண்டு 69 வது வயதில் மறைந்தார். அவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் 2.5  ஏக்கர் பரப்பளவில் அவர் வாழ்ந்த இடமான சிதம்பரம்- சீர்காழி மெயின் ரோட்டில் நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மார்பளவு வெங்கல சிலை அமைக்கப்பட்டு சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், இந்த மணிமண்டபத்தை செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணி மண்டபத்திற்குள் சுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாதைகள் வைக்கக் கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் மணிமண்டபத்தை தூய்மையாகப் பராமரிக்க உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு உதவி அலுவலர்,  மணிமண்டப ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்