Skip to main content

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் நேரடி பங்கேற்பு எதிர்காலத்தில் இல்லாத நிலை வரும்...! -நீதிபதி சுந்தரேஷ் பேச்சு!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

The direct participation of lawyers in the court will be non-existent in the future ...! -Judge Sundaresh speaks!

 

ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ''கொங்கு பொறியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை, பணிவாய்ப்பு ஆராய்ச்சி, வெளியீடுகள் ஆகியவற்றில் நிர்வாகம், பேராசிரியர்கள், ஊழியர்களின் சிறப்பான பணியின் காரணமாக, என்.ஏ.ஏ.சியின் ஏ பிளஸ் தரச்சான்றினைப் பெற்றுள்ளது.

 

கரோனா தொற்றுக்கு பிறகு, கற்றல், கற்பித்தல் மற்றும் பணிபுரியும் முறையும் மாற்றம் பெற்றுள்ளது. நீதித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களின் நேரடியான பங்கேற்புடன் கூடிய வாதங்கள் இல்லாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உற்பத்தித்துறை போன்ற துறைகளில் மட்டும் தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருந்தது. தற்போது நமது வாழ்வின் எல்லா பகுதிகளும் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. கலை அறிவியல், பொறியியல், சட்டம் என எந்த கல்வி பயின்றாலும், மாணவர்கள் தாங்கள் படிக்கும்போதே, தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

நீங்கள் கிராமப்புறம், நகர்ப்புறம் என எங்கிருந்து வந்திருந்தாலும், கல்லூரியில் படிக்கும்போதும், மாணவர்களுடன் பழகும் போது, மதம், பணம், சமூக ஏற்றத்தாழ்வு இவற்றையெல்லாம் விட மனிதாபிமானமே முக்கியம் என அறிந்திருப்பீர்கள். 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப மாணவர்கள் வாழ வேண்டும்.

 

கல்லூரி படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமானது அல்ல. ஒழுக்கமும், ஒற்றுமையும் கூடிய நடத்தையை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடமாகும். வாழ்வின் வெற்றிக்கும், இலக்கை அடையவும் நல்ல நடத்தை என்பது முக்கியமானது.

 

வகுப்பறையில் கற்பது மட்டுமல்ல அறிவு. சுயமாகவும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக் கொள்வதே அறிவாகும் என்பதை உணர்ந்து அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். உங்கள் தொழிலில் வெற்றி பெற, வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கடினமாக உழைக்கவில்லை என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அர்த்தமாகும். எனவே, வெற்றி பெற கடின உழைப்பும் முக்கியமானதாகும். உங்கள் தொழிலை புதுமையானதாக அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளே, சிறகுகளாய் மாறி எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும்.  தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."என்றார்.  

 

விழாவில், இளநிலை மாணவர்கள் 1415, முதுநிலை நிலை மாணவர்கள் 309 பேர் என மொத்தம் 1724 பேர் பட்டம் பெற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.