Skip to main content

தமிழக ஆட்சியில் வெற்றிடம் இல்லை....சினிமாத்துறையில் தான் வெற்றிடம் உள்ளது!!- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!!!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் மீது தீர்வு கண்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செம்பட்டியில் உள்ள சி.சி.கே.எம். மஹாலில் நடைபெற்றது.
 

dindugal sreenivasan speech


விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.மருதராஜ் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிவிட்டு பேசும்போது, "தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தங்கத்தாரகை அம்மா வழியில் வந்த தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

அம்மா மறைவிற்கு பின்பு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சில சினிமா நடிகர்கள் பேசுகின்றனர். வெற்றிடம் தமிழகத்தில் இல்லை. தமிழக ஆட்சியில் இல்லை சினிமாத்துறையில் தான் மாபெரும் வெற்றிடம் உள்ளது. எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்கள் காலத்தில் அவர்கள் நடித்த படம் நூறு நாட்கள் ஓடும், இருநூறு நாட்கள் ஓடும். ஆனால் இப்போது நடித்து வரும் நடிகர்கள் நடித்த படம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடுவதில்லை. அவர்கள் நடித்த படத்தில் பாட்டுக்கள் கூட யாரும் பாடுவது கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோரும் நடித்தாலும் தமிழகத்தில் தலைசிறந்த நடிகராக புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி,அர். அவர்கள் மகுடம் சூட்டினார்.

அவரிடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. காரணம் மக்களுக்கு நல்லது செய்து சத்துணவு வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். அதன்பின்னர் வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம் முதல், இலவச மடிக்கணிணி, முதியோர் உதவித்தொகையை உயர்த்திக் கொடுத்தல் போன்ற ஒப்பற்ற திட்டங்களை செயல்படுத்தியதால் அவரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆனால் இப்போது வெற்றிடம் உள்ளது என்று கூறுபவர்கள் உள்ள சினிமாத்துறையில் தான் வெற்றிடம் உள்ளது. அந்த இடத்தை இன்றுவரை யாரும் நிரப்பவில்லை.

தமிழகத்தில் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஒரு நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் நமது கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. திமுகவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் அந்த தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று கூறிய அம்மா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் பிரிவை ஏற்படுத்தி அதன்மூலம் மனுக்களை பெற்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதை தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் மனதார பாராட்டுகிறார்கள்" என்றார்.
 

dindugal sreenivasan speech


விழாவில் வருவாய்த்துறை சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சிறுகுறு விவசாயி சான்று, வாரிசு சான்று, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, இறப்பு நிவாரண நிதி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட குடியிருப்புகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 1,169 பயனாளிகளுக்கு ரூ.118.34 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கு.உஷா, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் பிரேம்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமராசு, ஆவின் துணைத்தலைவர் சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சிவக்குமார், ஆத்தூர் ஒன்றிய ஆணையாளர் சீதாராமன், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் பி.கோபி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தேவராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பித்தளைப்பட்டி நடராஜன், மாவட்ட மீனவரணி இணைச் செயலாளர் வக்கம்பட்டி அந்தோணி,சின்னாளபட்டி பேரூர் கழக செயலாளர் எல்.கணேஷ்பிரபு, சித்தையன்கோட்டை பேரூர் கழக செயலாளர் அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க. கழக நிர்வாகிகள், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.