திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் தர்மபுரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகவரி மூலம் முகநூல் கணக்கினை துவக்கி, தனது பெயரில் ஆபாச பதிவுகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே தர்மபுரி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த அருண்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, தனது நண்பன் சூர்ய பிரகாஷ் என்பவரின் செல்போன் மூலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெயரில் போலி அக்கவுண்ட் துவக்கி அதன் மூலம் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் அந்தப் பெண் பதிவிடுவதுபோல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பதிவிட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அம்மைய நாயக்கனூர் போலீசார் அருண் குமார் மற்றும் சூரிய பிரகாஷ் இருவரையும் கைதுசெய்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் புகார் அளித்த இளம்பெண் தங்களுடன் நீண்ட நாட்களாக பேசி வந்ததாகவும், திடீரென பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை அவமானப்படுத்த நினைத்ததாகவும், இதனால்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.