Dindigul Police Inspector Suspended

கொலை வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடம் நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஓமந்தூரான். இவர் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்,இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஓமந்தூரான் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது அவரது மகன் தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் சரணடைந்தார். இது தொடர்பாக சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் தந்தையை துன்புறுத்தியதால் ஓமந்தூரானை அவரது மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதற்கு இடையே ஓமந்தூரான்கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், குற்றவாளிக்கு சாதகமாக இன்ஸ்பெக்டர் செயல்பட்டதாகவும் ஓமந்தூரான் தந்தை ரங்கசாமி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திண்டுக்கல் சரக மற்றும் தென் மண் டல டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக பழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாற்றப்பட்டார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தீவிர விசாரணை நடத்தினார் அதில் ஓமந்தூரானை அவரது மனைவி பாண்டீஸ்வரி உறவினர்களான தாரிசபட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி, மதுரை சேர்ந்த ராமையா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்தும் அதன்பின் ஓமந்தூரானின் மகனை போலீசில் சரணடைய செய்ததும் தெரியவந்தது. அதன்பிறகு பாண்டீஸ்வரிஉள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கொலை வழக்கு விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் கவிதா அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க், கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபாவை பணியிடம் நீக்கம் செய்ய திண்டுக்கல் சரக டிஐஜி, டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனாக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபாவை பணியிடைநீக்கம் செய்துள்ளனர்.