Skip to main content

கொன்று எரித்த கொடூரம்; அ.தி.மு.க. நிர்வாகி கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Dindigul person passes away ADMK Member arrested by police
நடராஜன்

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவருமான நடராஜன் நெய் வியாபாரமும் செய்து வருவதால், அவரிடம் டிரைவராகவும் பணம் வசூல் செய்யும் வேலையும் பலர் பார்த்து வருகிறார்கள். 

 

அப்படி வேலை பார்த்து வந்த அம்பிளிக்கையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைக் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு, அம்பிளிக்கை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து எரித்து சாம்பல் கூட இல்லாமல் ஒரு கும்பல் எடுத்துச் சென்று விட்டனர் என்ற தகவல் ஊரில் உள்ள சிலர் மூலம் போலீஸின் காதுக்கு எட்டியது. அதன் அடிப்படையில்தான் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், பாலகுமாரசாமி, சரவணக்குமார் கொண்ட தனிப்படை தேடுதல் வேட்டையில் இறங்கியது. இதில், இரண்டே நாளில் குற்றவாளிகளான வடிவேல் உள்பட ஆறு பேரைக் கைது செய்தனர். முதல் குற்றவாளியான வடிவேல், கொலை செய்யப்பட்ட சுரேஷின் தாய்மாமன் என்பது தெரியவந்தது.

 

Dindigul person passes away ADMK Member arrested by police
வடிவேல்

 

இப்படி அம்பிளிக்கை ஊர் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட சுரேஷ், கொலை செய்யப்பட்ட பின்பு தான் எரித்திருக்கிறார்கள். அதை அவருடைய தாய் மாமனான வடிவேல் தான் செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட சுரேஷ் கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்பட சில இடங்களில் உள்ள பைனான்ஸ்களில் வேலை பார்த்து வந்தபோது, சில லட்சங்களைக் கையாடல் செய்திருக்கிறார். அந்தப் பணத்தை எல்லாம் தாய் மாமனான வடிவேல் தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதன்பின் சுரேஷை கண்டித்து தான் வேலை பார்க்கும் நடராஜன் நெய் கம்பெனியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்த்திருக்கிறார். அப்படி இருந்தும் வசூல் பணம் ஆறு லட்சத்தை கம்பெனியில் கட்டாமல் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கம்பெனி மேனேஜர் போலீசில் புகார் கொடுத்தார். 

 

அதைத் தொடர்ந்து நடராஜனும், இன்ஸ்பெக்டரை ஃபோனில் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். மேலும், தன்னிடம் வேலை பார்க்கும் வடிவேலுவைக் கூப்பிட்டு, உன் மாப்பிள்ளையை அழைத்து வா என்று கூறிய போதுதான் தென்காசியில் பதுங்கி இருந்த சுரேஷ்சை வடிவேலுவும் அவரது நண்பர்களும் அழைத்து வந்தனர். அப்பொழுது அவரிடமிருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வடிவேல் தருவதாகக் கூறியதன் பேரில், சுரேஷ் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். பின்னர், பணம் கேட்டு கம்பெனி உரிமையாளரான நடராஜன் வடிவேலுவை டார்ச்சர் செய்திருக்கிறார்.

 

Dindigul person passes away ADMK Member arrested by police
சுரேஷ்

 

இந்த நிலையில் தான், வடிவேலு தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடைப்பட்டி தோட்டத்தில் இருந்த சுரேஷை அளவுக்கு அதிகமாக மதுவைக் குடிக்க வைத்து நிதானம் இல்லாத அளவுக்கு கொண்டு சென்று, கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கிக் கொலை செய்து விட்டுத் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, சுரேஷ் உடலைக் காரில் ஏற்றி வந்து ஊரில் உள்ள உறவினர்களிடம் காட்டிவிட்டு, சுடுகாட்டுக்கு கொண்டு போய் எரித்து விட்டுத் தலைமறைவாகி விட்டனர். மேலும், சுரேஷை சுடுகாட்டில் எரிப்பதற்குத் தேவையான டயர் மற்றும் விறகுகளும் நடராஜனுக்கு சொந்தமான வேனில் கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வடிவேலுவையும் அதற்குத் துணை போன கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த நிலையில் சிறையில் இருக்கும் வடிவேலுவை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது என்.பி.என். நெய் கம்பெனியின் உரிமையாளரான ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன் தூண்டுதலின் பேரில் தான் எனது மாப்பிள்ளையான சுரேஷை தனது நண்பர்கள் மூலம் கொலை செய்தேன் என்று வடிவேலு விசாரணையில் கூறியிருக்கிறார். 

 

அதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன், சுரேஷை கொலை செய்யத் தூண்டி இருக்கிறார் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விஷயம் நடராஜன் காதுக்கு எட்டவே பெங்களூருவில் தலைமறைவாகிவிட்டார். இந்த விஷயம் போலீசாருக்குத் தெரியவரவே, டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இளஞ்செழியன் உள்பட தனிப்படை பெங்களூருக்குச் சென்று தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் தலைமறைவான நடராஜன் உலாவி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 

இந்தத் தகவலின் அடிப்படையில், டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இளஞ்செழியன் உள்பட தனிப்படையினர் கோயம்பேட்டில் உள்ள பஸ்களில் சோதனை செய்தபோது, வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற நடராஜனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நடராஜனை ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து மேலும் விசாரணை செய்ய உள்ளனர். இச்சம்பவம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.