Skip to main content

தனியாக இருந்த மருத்துவர்; கொள்ளையர்கள் துணிகரம்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

dindigul palani gh chief doctor udhayakumar incident

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ரீநிதி மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தனது மகளைப் பார்த்து விட்டு வருவதற்காக உதயகுமார் மனைவி ரேவதி கடந்த 2 நாட்களுக்கு மதுரை சென்றுள்ளார்.

 

இந்நிலையில் உதயகுமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் தனது மருத்துவப் பணியை  முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த உதயகுமார், வீட்டைப் பூட்டி விட்டுத் தூங்கியுள்ளார். இவர் தூங்கிய சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த 3 நபர்கள் உதயகுமாரின் வீட்டில் நுழைந்து உதயகுமாரை எழுப்பி கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியதுடன் அங்கிருந்த சேரில் அவரைக் கட்டிப் போட்டுள்ளனர்.

 

அதன்பிறகு அந்த கும்பல் பீரோக்களில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உதயகுமாரை சேரில் இருந்து அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடலில் காயங்களுடன் தடுமாறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார், அவ்வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு அவர்கள் மூலமாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி போலீசார், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.