திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருவோர்களில், சிகிச்சை பலனின்றி இறப்போர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை மரணம் அல்லாமல் உயிரிழப்போர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யும் முக்கிய இடமாக திகழ்கிறது.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் குப்பைகள் போன்ற அனைத்துக் கழிவுகளையும் பிரேதப் பரிசோதனை மைய சவக்கிடங்கின் முன்பு கொட்டி விடுகின்றனர். இதை உடனடியாக அப்புறப்படுத்துவதும் இல்லை. இதனால் உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை முடிந்து, பிரேதத்தை பெற்றுக்கொள்ள நீண்டநேரம் காத்திருக்கும் உறவினர்கள் மிகுந்த வேதனைக்கும், முகச்சுழிப்பிற்கும் உள்ளாகின்றனர்.
இது சவக்கிடங்கா? அல்லது கழிவுக் கிடங்கா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இப்படி இந்தக் கழிவுகளின் அருகிலேயே நீண்டநேரம் காத்திருப்பதால் இவர்களுக்கும் கரோனா போன்ற நோய்த் தொற்றுகள் ஏதேனும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனை அதிகாரிகள் புதிய கட்டிடங்கள் கட்டுவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு, அதில் காட்டும் தீவிரப் பணியை இது போன்ற கழிவுகளை அப்புறப்படுத்தி மக்களின் நலனைக் காக்கவும் ஈடுபட்டால் பொதுமக்கள் சுகாதாரத்துடன் வாழ உதவியாக இருக்கும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.