Skip to main content

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

dindigul district migrant workers trains


திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 1,600 பேர் ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் தனியார் நிறுவனங்களில் தங்கியிருந்து வேலை செய்வது, போர்வை மற்றும் மெத்தை விற்பனை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். 
 


இதற்கிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி வீட்டில் முடங்கினர். மேலும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவித்தனர். இந்த நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக மத்திய அரசு 'ஷ்ராமிக்' என்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றது. 

இந்தச் சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலையின்றித் தவித்த அவர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து, தமிழக அரசுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,337 பேர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 263 பேர் என மொத்தம் 1,600 வெளிமாநிலத் தொழிலாளர்களை  அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

 

 


இதற்காக அவர்களை வாகனங்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்களுக்குத் தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் அனைவருக்கும் முகக்கவசம், கைகளைக் கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் அடங்கிய பையை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். அதைத் தொடர்ந்து நேற்று (20/05/2020) 1,600 வெளிமாநிலத் தொழிலாளர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பீஹார் மாநிலத்துக்குச் சிறப்பு 'ஷ்ராமிக்' ரயிலில் புறப்பட்டனர். 
 

http://onelink.to/nknapp



முன்னதாகத் தேனியில் இருந்து வந்த பீகார் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றைத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் ஆகியோர் வழங்கி அனுப்பி வைத்திருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.