Skip to main content

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் கஞ்சித்தொட்டி திறப்பு!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

DINDIGUL DISTRICT CORONAVIRUS LOCKDOWN WEAVERS


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் நம்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அஞ்சுகம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், கமலாநேரு, அண்ணா, காந்திஜி, ம.பொ.சிலம்புசெல்வர் நெசவாளர் கூட்டுறவு சங்கம், சித்தயன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 
 


சின்னாளபட்டியில் உள்ள நான்காயிரம் கைத்தறி நெசவாளர்களில் சுமார் 1,500 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள 2,500 நெசவாளர்கள் தனியாரிடம் பட்டுநூல் வாங்கி நெசவு நெய்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25- ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று வரை நெசவு நெய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர். 

கூட்டுறவு சங்கங்களில் மேலாளர்கள் தங்களிடம் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்காததால் அவர்களும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் சின்னாளபட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் கமலாநேரு நெசவாளர் காலனி, ஜெ.ஜெ.காலனி, அஞ்சுகம் காலனி, ராஜகாளியம்மன் நகர், சித்தன்நகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் அருகே கடந்த இரண்டு நாட்களாக கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்களிடம் பணம் வசூல் செய்து மொத்தமாக கஞ்சி காய்ச்சி நெசவாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 
 

 

 


இது குறித்து ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த சௌடேஸ்வரி நெசவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செண்பகராமன் கூறுகையில், "கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்கள் மீது அக்கறை இல்லாததால் முறையாக நூல் மற்றும் பாவுகளை வாங்கி நெசவாளர்களுக்குக் கொடுப்பதில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்கள் தனியார் சேலை உற்பத்தியாளர்களிடம் அடிமைபோல் உள்ளனர். முறையாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ததற்கு கூலிகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் மறுப்பதால் நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்றார். 

நெசவாளர் செல்வராஜ் கூறுகையில், "நான் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சங்கத்தில் மேலாளர் சேலை நெய்வதற்கு ரூ.200 கூலி குறைவாகக் கொடுப்பேன் என்கிறார். நாங்கள் முடியாது என்று கூறியதால், எங்களுக்கு நெசவு நெய்ய நூல்கள் மற்றும் பாவுகளை வழங்குவதில்லை. ஏற்கனவே 20 சேலை வரை நெய்து கொடுத்துள்ளோம், அதற்கும் கூலி குறைவாக கொடுப்பேன் என்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆனந்தனிடம் புகார் செய்தோம். அவர் ஏற்கனவே நெய்த சேலைகளுக்கு கூலி குறைத்துக் கொடுக்க கூடாது எனக் கூறியும் கூலி தர மறுத்து வருகிறார் என்றார். முறையாக எங்களுக்குச் சேலை நெய்ய நூல் வழங்காததால் நாங்கள் வறுமையில் வாடுகிறோம். மருத்துவமனைக்குச் செல்லக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறோம்" என்றார். 
 

http://onelink.to/nknapp


இதேபோல் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், "கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் முறையாக நூல்கள் மற்றும் பாவுகளை வழங்காததால் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். கஞ்சித்தொட்டி திறக்கும் அளவிற்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார். 

மாவட்ட ஆட்சித்தலைவர், கைத்தறி நெசவாளர்கள் நலனில் அக்கறை கொண்டு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்று சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.