Skip to main content

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் கஞ்சித்தொட்டி திறப்பு!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

DINDIGUL DISTRICT CORONAVIRUS LOCKDOWN WEAVERS


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் நம்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அஞ்சுகம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், கமலாநேரு, அண்ணா, காந்திஜி, ம.பொ.சிலம்புசெல்வர் நெசவாளர் கூட்டுறவு சங்கம், சித்தயன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 
 


சின்னாளபட்டியில் உள்ள நான்காயிரம் கைத்தறி நெசவாளர்களில் சுமார் 1,500 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள 2,500 நெசவாளர்கள் தனியாரிடம் பட்டுநூல் வாங்கி நெசவு நெய்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25- ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று வரை நெசவு நெய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர். 

கூட்டுறவு சங்கங்களில் மேலாளர்கள் தங்களிடம் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்காததால் அவர்களும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் சின்னாளபட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் கமலாநேரு நெசவாளர் காலனி, ஜெ.ஜெ.காலனி, அஞ்சுகம் காலனி, ராஜகாளியம்மன் நகர், சித்தன்நகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் அருகே கடந்த இரண்டு நாட்களாக கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்களிடம் பணம் வசூல் செய்து மொத்தமாக கஞ்சி காய்ச்சி நெசவாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 
 

 

 


இது குறித்து ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த சௌடேஸ்வரி நெசவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செண்பகராமன் கூறுகையில், "கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்கள் மீது அக்கறை இல்லாததால் முறையாக நூல் மற்றும் பாவுகளை வாங்கி நெசவாளர்களுக்குக் கொடுப்பதில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்கள் தனியார் சேலை உற்பத்தியாளர்களிடம் அடிமைபோல் உள்ளனர். முறையாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ததற்கு கூலிகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் மறுப்பதால் நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்றார். 

நெசவாளர் செல்வராஜ் கூறுகையில், "நான் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சங்கத்தில் மேலாளர் சேலை நெய்வதற்கு ரூ.200 கூலி குறைவாகக் கொடுப்பேன் என்கிறார். நாங்கள் முடியாது என்று கூறியதால், எங்களுக்கு நெசவு நெய்ய நூல்கள் மற்றும் பாவுகளை வழங்குவதில்லை. ஏற்கனவே 20 சேலை வரை நெய்து கொடுத்துள்ளோம், அதற்கும் கூலி குறைவாக கொடுப்பேன் என்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆனந்தனிடம் புகார் செய்தோம். அவர் ஏற்கனவே நெய்த சேலைகளுக்கு கூலி குறைத்துக் கொடுக்க கூடாது எனக் கூறியும் கூலி தர மறுத்து வருகிறார் என்றார். முறையாக எங்களுக்குச் சேலை நெய்ய நூல் வழங்காததால் நாங்கள் வறுமையில் வாடுகிறோம். மருத்துவமனைக்குச் செல்லக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறோம்" என்றார். 
 

http://onelink.to/nknapp


இதேபோல் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், "கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் முறையாக நூல்கள் மற்றும் பாவுகளை வழங்காததால் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். கஞ்சித்தொட்டி திறக்கும் அளவிற்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார். 

மாவட்ட ஆட்சித்தலைவர், கைத்தறி நெசவாளர்கள் நலனில் அக்கறை கொண்டு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்று சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.