Skip to main content

’தமிழர்கள் கல்வி கற்று உலகளவில் பரவ காமராஜரே காரணம்’ -தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019


 

சிதம்பரத்தில் சிதம்பரம் காமராஜர் பேரவையின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா, காமராஜரின்117-ஆவது பிறந்த தின முப்பெரும் விழா நடைபெற்றது. காமராஜர் பேரவைத் தலைவர் இலக்குமணன், செயலர் ஜீவா விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில்,

அரை நூற்றாண்டாக விழா நடத்தி வரும் காமராஜர் பேரவைக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் தினமும் ஏதாவதொரு மூலையில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதென்றால், அது காமராஜர் பெயர்தான்.

 

d

 

இது அவரது அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம். தனது ஆட்சிக் காலத்தில் காமராஜர் செய்த அளப்பரிய சாதனைகள் வெளியில் தெரியாமல் போனதற்கு, அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் அதுகுறித்து விளம்பரப்படுத்தத் தெரியாததே காரணம். தமிழர்கள் சிறந்த கல்வி கற்று உலகம் முழுவதும் பரவக் காரணமானவர் காமராஜர் மட்டுமே. பேசப்படாவிட்டாலும் அவர் பத்து ஆண்டுகள் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளை யாரும் மறுத்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. எனவே மாணவர்கள் காமராஜரை நன்கு படிக்கவேண்டும் என்றார். 

 

இதனைதொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

 

முன்னதாக, ராணி சீதை ஆச்சி மேல் நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்  விநாயகம் வரவேற்றார். வழக்குரைஞர் சம்பந்தம், மூத்த பத்திரிகையாளர் தணிகைதம்பி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ராஜ்பிரவீன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் மாணவ மாணவிகள் என திரளாக கலந்துகொண்டனர்.

 

அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு சிதம்பரம் காமராஜர் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

“அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

What Annamalai says is a lie filtered through Jamakalam  Minister Duraimurugan

 

அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த தனியார் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு. பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

 

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு - பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை,  மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை,  வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இது என்னுடைய நீண்டகால அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வாணமாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.