Skip to main content

சிதம்பரம் கோயிலில் நள்ளிரவு வரை மல்லுகட்டிய தீட்சிதர்கள்!!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
The Dikshitars who have rallied in the Chidambaram temple till midnight

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 27-ந் தேதியான இன்று தேர்த்திருவிழாவும், 28-ந் தேதி ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், மிகவும் எளிய முறையில் ஆனி திருமஞ்சன திருவிழாவை கோவிலுக்கு உள்ளே நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 150 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து தீட்சிதர்களுக்கும் கரோனா பரிசோதனை முடிவின்படி அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் டெஸ்ட் எடுத்தனர்..  இந்த நிலையில்  150 பேரில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.  இதனைத்தொடர்ந்து கோவிலுக்குள் சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். திருவிழாவுக்கு 5 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து திருவிழாவிற்கான பூஜைகள் நடத்த வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

இந்தநிலையில் இரவு பூஜை முடிந்து தீட்சிதர்கள் கோவிலை விட்டு வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸ் படையினர் கோவிலுக்கு உள்ளே சென்று தீட்சிதர்களை வெளியே அனுப்ப முயற்சி செய்தனர். அப்போது தீட்சிதர்கள் நாங்க முடிவு செய்துவிட்டு வெளியே வந்து விடுகிறோம் என்று கூறியதின் பேரில் போலீசார் அனைவரும் வெளியே வந்தனர். பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணிக்கு மேல் சென்றது. முடிவு எட்டவில்லை.

இந்த நிலையில் இரவு 1 மணிக்கு மேல் தீட்சிதர்கள், 150 பேரில் கரோனா டெஸ்டில் நெகடிவ் என வந்த 148 பேரையும் அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் அனைவரும் சாலையில் உட்கார்ந்து ஒப்பாரிவைப்போம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தீட்சிதர்களிடம் தற்போது நிலவும் பிரச்சனையை எடுத்து கூறினார்கள். அப்போதும் சமாதானம் ஆகாத நிலையில், இந்தநிலை நீடித்தால் கோவிலுக்கு சீல் வைக்கும் நிலைமையும் ஏற்படும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த தீட்சிதர்கள் 25 பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர். இதனை ஏற்ற அதிகாரிகள் அவர்களை கோவிலின் உள்ளே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகயில் கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவிகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பபட்டனர். இன்று காலை தேர் திருவிழாவுக்கான அனைத்து பூஜைகளும் எளிய முறையில் நடைபெற்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.