Dikshidar affair ended; Devotees who ascended Kanakasabha

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஆண்டாண்டு காலமாகப்பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறிதரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனதீட்சிதர்கள் அறிவித்தனர். இதனை அனைத்து தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் அவர்கள் தீட்சிதர்களைத்தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கோவிலில் கனகசபையில் ஏறி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அரசாணை வெளியிட்டது. இதனை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஆனித்திருமஞ்சனத்தேர் மற்றும் தரிசன விழாவையொட்டி தீட்சிதர்கள் நான்கு நாட்களுக்கு கனகசபையில் பொதுமக்கள் வழிபட அனுமதி இல்லை எனப் பதாகை வைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பதாகைகளை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

Advertisment

இதனை ஒட்டி 26 ஆம் தேதி மாலை தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. ஆனால், பதாகை அகற்றப்பட்டாலும் கோவில் கனகசபையைத்திறக்க முடியாது எனத்தீட்சிதர்கள் பிடிவாதமாக இருந்து வந்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பை மீறி கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் தீட்சிதர்கள் கனகசபை கதவைத்திறந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். கோவிலுக்கு வந்த பல்வேறு தரப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்ப் பேரவையின் நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக நடராஜர் கோவிலில் தீட்சிதர்களுக்கும் அறநிலையத்துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கூச்சல் குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது.