கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 144 தடை உத்தரவுக்கும் ஊரடங்கு உத்தரவுக்கும் என்ன வித்தியாசம் என்கிற விவாதங்கள் பொதுவெளியில் எதிரொலிக்கச் செய்கின்றன. இரண்டுக்கும் இடையில் சின்னச் சின்ன வித்தியாசங்கள்தான்.
144 தடை உத்தரவு என்பது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, இப்படிப்பட்ட அபாயங்கள் நடக்க வாய்ப்புண்டு என எதிர்பார்க்கப்படும் சூழல்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் 144-வது பிரிவை அரசாங்கம் அமல்படுத்துகிறது. இதன்படி, பொதுவெளிகளில் 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி விவாதிக்க அனுமதி இல்லை. அப்படி கும்பலாக கூடுவதற்குத் தடை விதிக்கிறது இந்தச் சட்டப்பிரிவு. இதனை மீறுபவர்களை கைது செய்து 6 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் ஒன்று கூடுதலைத் தடுக்கவே இந்த சட்டப் பிரிவை அறிவித்துள்ளது அரசு. அதேசமயம், அத்யாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் கூடும் கூட்டத்தை இந்தச் சட்டம் அனுமதித்தாலும் குறைந்தபட்ச நேரங்களில் கூட்டம் கலைந்து விட வேண்டும்.
ஊரடங்கு என்பது அசாதாரண சூழல்களின் போது சட்டம்-ஒழுங்கை பாதுக்காக பிறப்பிக்கப்படும் உத்தரவு. பொதுவாக, நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு மக்கள் வெளியே நடமாடக் கூடாது. அவரவர்கள் இருக்கும் இடங்களிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்யாவசிய சேவைகள் மற்றும் பணிகள் தொடர்பானவைகள் மட்டுமே இயங்கும். மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டு விடும். இதனை மீறுபவர்களையும் கைது செய்து 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.