Skip to main content

‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் உயரதிகாரிகள் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் கைது செய்யவில்லையா?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 21/06/2020 | Edited on 21/06/2020
Did you know the elite authorities involved in the TNPSC have not been arrested?

 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-2-ஏ, குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளில், மிகப்பெரிய முறைகேடுகள் அரங்கேறி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. ரெக்கார்டு கிளார்க் ஓம் காந்தன், ஜெயக்குமாரின் கூட்டாளிகள் சாபூதீன், பிஜோஸ்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,  அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ், ‘டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 3 தேர்வுகளில் நடந்த மோசடிகளைத்தான் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் இதுபோல எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது என்பது தெரியவில்லை. இளைய தலைமுறையினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு செய்து, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து,  நீதிபதி ‘3 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. 3 அதிகாரிகள் தலைமையில் 3 தனிப்படையினர் புலன் விசாரணை செய்கின்றனர். இந்த 3 தனிப்படையின் விசாரணையை எந்த அதிகாரி மேற்பார்வையிடுகிறார்? முறைகேட்டில் ஈடுபட்டதாக டி.என்.பி.எஸ்.சி.யின் கீழ்மட்ட ஊழியர்களை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மேல்மட்ட அளவில் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லையா? உயர் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே அவர்களை போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனரா?‘ என்று  சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அப்போது, குற்றவியல் வழக்கறிஞர் ‘கரோனா ஊரடங்கினால் புலன் விசாரணையை தீவிரமாக மேற்கொள்ள போலீசாரால் முடியவில்லை’ என்றார். அதற்கு நீதிபதி, ‘புலன்விசாரணைக்கு இதுதான் சரியான நேரம். ஊரடங்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு என்ன வேலை உள்ளது? முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யலாம். புலன் விசாரணையை தீவிரப்படுத்தலாம். ஏன் இதை செய்யவில்லை? அப்போதுதான், புலன்விசாரணை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும். விசாரணை ஒரே நிலையில் இருப்பதற்கு பதில், அடுத்த கட்டத்துக்கு போலீசார் எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாகக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.