சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கரோனா பணியில் ஈடுபடுத்த தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை, கரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், இந்த உத்தரவை மீறி, சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தவிர பிற மருத்துவமனைகளிலும், பல மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதாகக்கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏராளமான மருத்துவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், இது மருத்துவர்களை மனரீதியாக பாதிக்க செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு செப்டம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.