
தருமபுரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக இளம் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் பிரசவத்தின் போது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதன்படி மருத்துவமனையின் தரநிலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவமனையில் தரநிலை 3இல் இருந்து 2ஆக தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், டெங்குகாய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்டவற்றிற்குச் சிகிச்சை அளிக்கக் கூடாது. மகப்பேறு தீவிர சிகிச்சை அளிக்கக் கூடாது. இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கவும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது. அதோடு மகப்பேறு மருத்துவரைக் கூடுதலாக பணியமர்த்தி பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மருத்துவத்துறை இணை இயக்குநர் சாந்தி பிறப்பித்துள்ளார்.