Skip to main content

தர்மபுரி: அரசு வேலை ஆசை காட்டி ஒரு கோடி சுருட்டல்! பெண் உள்பட இருவர் கைது; மேலும் இருவருக்கு வலை!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

தர்மபுரி அருகே, அரசாங்க வேலையை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற பேராசையால் கிராம மக்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்திருப்பதும், இந்த மோசடி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கும், சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.


தர்மபுரி மாவட்டம் பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் கோபால். மாற்றுத்திறனாளியான இவர் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளார்.


அரசு வேலைக்காக முயற்சி செய்து வரும் கோபால், டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வை, சென்னையில் எழுதியுள்ளார். அவர் தேர்வு எழுதிய சில நாள்கள் கழித்து, பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கோபாலின் தந்தையைத் தேடி வந்தார். 
 

dharmapuri district govt jobs take money two persons arrested police


அப்போது அவர், ''குரூப்-1 தேர்வு எழுதியுள்ள கோபால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக அரசு வேலை வாங்கித் தருகிறேன். அதற்கான ஆட்கள் எல்லாம் என் கைவசம் இருக்கிறார்கள்,'' என்று ஆசை வலை விரித்துள்ளார். இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியதுடன், முன்பணமாக 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் வேலை வாங்கித் தராமல் கம்பி நீட்டினார். 


இதற்கிடையே, அவர் இதுபோல் பலரிடம் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறித்திருப்பது கோபாலின் தந்தை தேவராஜூக்கு தெரிய வந்ததை அடுத்து கடும் ஆத்திரம் அடைந்தார். அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளார்.


இந்நிலையில்தான், செவ்வாய்க்கிழமை (பிப். 4) மாலையில், கோவிந்தராஜ் மற்றும் அவருடன் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, கடத்தூரில் சிலரிடம் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவதாக பேசிக் கொண்டிருப்பது குறித்து தேவராஜூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், அவரைப்போல் பணம் கொடுத்து ஏமாந்த சிலரும் கடத்தூர் விரைந்து சென்று கோவிந்தராஜை சுற்றி வளைத்தனர். தாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் கோவிந்தராஜோ, பணத்தைத் திருப்பித்தர முடியாது என்று தடாலடியாக கூறியதுடன், தன்னை நெருங்கிய கும்பலைப் பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்த மற்றொரு நபரும் தப்பி ஓடிவிட்டார்.


அதையடுத்து தேவராஜ் மற்றும் மாதேஹள்ளியைச் சேர்ந்த வடிவேல், சுப்ரமணி, கோணம்மாள், பாப்பாரப்பட்டி முனுசாமி, பூங்கான், தட்டாரப்பட்டி ராஜா, கானாப்பட்டி சின்னப்பிள்ளை உள்ளிட்டோர் திரண்டு சென்று உடனடியாக தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 


அந்தப் புகாரில், அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக்கூறி கோவிந்தராஜ் (29), அரசுப் பேருந்து ஓட்டுநரான அவருடைய உறவினர் முருகன் (41), இவருடைய மனைவி ஷீலா (31) மற்றும் ஷீலாவின் தம்பி திருமலை (29) ஆகியோர் பல பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டு மோசடி செய்ததாக புகார் கூறியுள்ளனர். 


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மல்லுப்பட்டியில் பதுங்கி இருந்த ஷீலாவையும், அவருடைய தம்பி திருமலையையும் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான கோவிந்தராஜ், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


இந்த மோசடி வழக்கில், உண்மையில் இந்த நான்கு பேருக்கு மட்டும்தான் தொடர்பா அல்லது அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருக்கிறதா? இன்னும் வேறு யார் யாரிடமெல்லாம் இதுபோல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.