Skip to main content

வற்றல்மலையில் குழந்தைகளை மகிழ்விக்க காற்றாடி திருவிழா மைதானம் அமைக்க முடிவு! தலைமை செயலாளர் தகவல்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வற்றல்மலையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் உள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.


தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஞாயிற்றுக்கிழமை (நவ. 25) தர்மபுரிக்கு வந்தார். நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் தொழில்பேட்டை (சிப்காட்) அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அன்னசாகரம் ஏரி குடிமராமத்துப்பணி, நூலஹள்ளியில் நுண்ணீர் பாசனத்தில் போடப்பட்டுள்ள துவரை விதைப்பண்ணை வயல் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார். 

DHARMAPURI DISTRICT CHILDRENS ENTERTAINMENT  Windmill Festival TN CHIEF SECRETARY


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வற்றல்மலையை சுற்றுலா தலமாக மாற்ற, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பணிகள் முழுமை அடையாமல் இருந்தன. இப்போது, வற்றல் மலையை இயற்கைச்சூழல் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களின் பண்ணை சார்ந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம், வற்றல் மலையில் தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வற்றல் மலையில் உள்ள நீர்நிலைகளை சீர்படுத்தி, அங்கும் பெய்யும் மழைநீரை, அதிகளவில் நீர்நிலைகளில் சேகரித்து, நிலத்தடி நீராதாரத்தை பெருக்கினால், இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும். 


சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சிறு குடில்கள் அமைத்தல், வற்றல் மலையில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 'சைக்கிளிங் ட்ராக்' அமைத்தல், குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடும் வகையில் காற்றாடி விடும் திருவிழா நடத்துவதற்கான மைதானம் உள்ளிட்ட பணிகளை செய்து முடித்தால், நகர்ப்புற மக்கள் பலர் இங்கு சுற்றுலா வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.


நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் மீதான ஆர்வம் அதிகரிக்கவும் வற்றல்மலை சுற்றுலா தலம் உதவியாக இருக்கும். மேலும், வற்றல்மலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து சிறு கிராமங்களையும் ஒரே ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உரிய நேரத்தில் பரிசீலிக்கும். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் கூறினார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.