Skip to main content

தர்மபுரி அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி; கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் கோரம்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

 

தர்மபுரி அருகே, 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையாக தொப்பூர் கணவாய்ப் பகுதி உள்ளது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான இந்தப் பகுதி, அடிக்கடி விபத்துகள் நடக்கும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தொப்பூர் கணவாய் அருகே வாகனங்கள் செல்லும்போது குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிரந்தரமாக எச்சரிக்கை அறிவிப்பு பலகையும், இரவில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனாலும், தொப்பூரில் கோர விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், இன்றும் (டிச. 12) அதே இடத்தில் கோர விபத்து அரங்கேறியுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு.

 

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு சரக்கு லாரி இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மாலை (டிச. 12) 3 மணியளவில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி தொப்பூர் கணவாய் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஒரு மைல் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் படிப்படியாகப் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் எறும்பு ஊர்வது போல மெதுவாகச் சென்று கொண்டிருந்தன.

 

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய்ப் பகுதி அருகே வந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த இடம் சரிவான பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக முன்னோக்கிச் சென்ற லாரி, முன்னால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

 

கண்டெய்னர் லாரி பலமாக மோதியதில் ஒவ்வொரு வாகனமும் அதற்கு முன்னால் சென்ற மற்ற வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி பெரும் விபத்து உண்டானது. மொத்தம் 12 கார்கள், 2 டாரஸ் லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறிக்கொண்டு நின்றன. சில கார்கள் அப்பளம்போல் நொறுங்கின.

 

இந்தப் பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில், அந்த நபர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் இறந்துள்ளனர். இறந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. பலியான நால்வரும் ஆண்கள். உயிரிழந்த மதன்குமார் என்பவரிடம் ஐந்து சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

 

விபத்து  குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். எக்ஸ்கவேட்டர் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, விபத்தில் உருக்குலைந்த வாகனங்களை மீட்கும் பணிகள் நடந்தன. மேலும், மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

 

இந்த விபத்தால் சுமார் 6 கீ.மீ. தொலைவுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்துச் சீரடைய 5 மணி நேரத்துக்கும் மேலானது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.