dhanabalan talks about palm juice  shop related karur meeting

கரூரில் தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத்தலைவர் என்.ஆர். தனபாலன் புதிய நிர்வாகிகளைத்தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகளும் புது நிர்வாகிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

Advertisment

விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத்தலைவர் என்.ஆர். தனபாலன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, "தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரத்தின் கள் ஒரு இயற்கை உணவாகும். கள்ளு குடித்து உயிர் இழப்பு ஏற்படுவதை நிரூபித்தால், எங்கள் பேரவையின் சார்பில் ஒரு கோடி பரிசு தருகிறோம் என அறிவித்தோம். பின்னர் பத்து கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை. பனையால் விவசாயி வாழ்வான். பனை மரத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வார்கள். தேர்தல் வரும் பொழுது பனை மரத்தை பாதுகாப்போம் பனைமரத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்போம் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள்.

Advertisment

கள்ளுக் கடை திறந்தால் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்து கள்ளுக் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழக அரசுக்கு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே ஒரு கோரிக்கை கள்ளுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆகும். தமிழகம் விளையாட்டுத்துறையில் மேம்பட்டு விளங்கவும், ஒலிம்பிக்கில் கபாடியை கொண்டு சேர்த்ததும் இன்னும் எண்ணற்ற நலன்களை விளையாட்டு துறைக்கு செய்த சிவந்தி ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கடைகளை தமிழகத்தில் திறக்காவிட்டால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" எனத்தெரிவித்தார்.