குடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர்! -ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

தாமிரபரணி நதி மாசு அடைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதைத் தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிர பரணி ஆற்றில் தற்போது கழிவு நீர் கலக்கப்படுகிறதா? அவ்வாறு கழிவு நீர் கலந்து வந்தால் அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

dhamirabarani water in quality for drinking!- Orders to set up study committee and submit report

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி, மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? அவ்வாறு திட்டம் வைத்திருந்தால் அந்தக் திட்டத்தின் நிலை என்ன? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தாமிர பரணி ஆற்று நீரின் தற்போதைய தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி மற்றும் மூத்த அறிவியலாளர், திருநெல்வேலி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டதோடு, பொதுமக்கள் குடிப்பதற்கான தரத்தில் தாமிரபரணி ஆற்று நீர் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Environmental order rivers water
இதையும் படியுங்கள்
Subscribe