Skip to main content

தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதால் இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம் 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
dewali



விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் திடீர் ஆய்வின்போது ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 100 இலவச பட்டாசு பாக்ஸ், பேண்ட் சர்ட் 50 செட் என காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்ததில் இதுவரை கிடைத்துள்ளது. 
 

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ்சிடம் சுமார் 7 மணி நேரமாக விசாரணை செய்தனர். இதனால் விழுப்புரம் மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.


 தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதால் திருநாவலூர் காவல் நிலையம் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி ஷாப்பிங்! கையும் களவுமாகச் சிக்கிய பெண்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Deepavali Shopping! Girl caught  theft in trichy
                                                 கோப்புப் படம் 

 

தமிழ்நாடு முழுவதும் வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காகப் பொதுமக்கள், விடுமுறை நாளான நேற்று துணிகளை வாங்கக் குவிந்தனர். இதில் கூட்டத்தோடு கூட்டமாகத் திருடர்களும் தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டாமல், வாடிக்கையாளர்கள் போல் கடையில் கைவரிசை காட்டிய பெண் வசமாகச் சிக்கினார். 

 

திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில், வாடிக்கையாளர்களுடன் வாடிக்கையாளரைப் போல் கடைக்குள் சென்ற பெண் ஒருவர், 3 பேண்ட், 4 சட்டை, 3 டீ சர்ட் உள்ளிட்டவற்றைத் தான் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்துத் திருடினார். இதனைக் கவனித்த பணியாளர்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கடை மேலாளரிடம் கொடுத்தனர். அவர் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணைச் சிறையில் அடைத்தனர்.

 


 

Next Story

நிரம்பி வழிந்த டாஸ்மாக்! -தமிழ்நாட்டின் குடிப் பெருமை!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
ddd

 

கரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் திணறலால், இந்த வருட தீபாவளி வியாபாரம் ரொம்பவே டல் அடித்திருக்கிறது. குறிப்பாக ஜவுளி, மளிகை, மட்டன், சிக்கன், பலகாரம் வெடி உள்ளிட்டவைகளின் வியாபாரம் பாதிக்கும் குறைவாய் படுத்துவிட்ட நிலையில், டாஸ்மாக் விற்பனை மட்டும் தள்ளாடாமல் ஸ்டெடியாய் எகிறிச் சென்று அரசின் கல்லாவை ஏகத்துக்கும் நிறைத்திருக்கிறது.

 

தமிழகம் முழுவதும் 5330 டாஸ்மாக் சில்லறைக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் வருகிறது. இது சிறப்பு விடுமுறை நாட்களில் மட்டும் 150 கோடி ரூபாய்வரை எகிறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இது 600 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பே திகைப்பு விலகாமல் சொல்கிறது.

 

தீபாவளிக்கு முதல்நாளான 13-ஆம் தேதி 228 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளான 14-ஆம் தேதி, 238 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையானதால் டாஸ்மாக் தரப்பு கிக்கில் இருக்கிறது.

 

அதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 104 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 95 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடி ரூபாய்க்கும் சரக்குகள் விற்பனையாகி உள்ளதாம். "அனைத்து மாவட்டங்களிலுமே இந்த ஆண்டின் விற்பனை சூடுபிடித்துக் காணப்பட்டது' என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 355 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு கிடுகிடுவென இரு மடங்கு ஆகியிருக்கிறது.

 

கரோனாவால் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை யில் தள்ளாடிவரும் நிலையில், இந்த இருமடங்கு விற்பனை எப்படி சாத்தியமானது?

 

நம்மிடம் பேசிய தகவல் பெறும் உரிமை ஆர்வலர் லப்பைக்குடிகாடு சாகுல்ஹமீது, விசேஷ நாட்களில் நட்பு விருந்து என்ற பெயரில் மது விருந்து நடத்தும் கலாச்சாரம் அதிகரித்திருக்கிறது. இப்போது திருமணம், காது குத்து, குலதெய்வ வழிபாடு என எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மது விருந்து நடக்கிறது.

 

அதேபோல் முக்கிய அரசியல் கட்சிகள், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரையும் கவனிக்கின்றன. குறிப்பாக கட்சிகளின் கீழ்மட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும்போதே, மதுபாட்டில்களையும் வழங்கிவிடுகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கை கெடுவது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இங்கிருக்கும் அரசும் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக சொல்லிக்கொண்டே, விற்பனையைப் பெருக்குகிறது.

 

"தேசிய நெருஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்' என்று நீதிமன்றங்கள் சொன்ன பிறகும், "நெடுஞ்சாலை ஓரம் குறிப் பிட்ட தூரத்திற்கு அப்பால் கடை வைக்கலாம்' என்று, அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றிக் கொண்டு, டாஸ்மாக் கடைகளை வைத்து, வசூல் வேட்டை நடத்துகிறது என்கிறார் வருத்தமாய். நெடுஞ்சாலை பக்கம் கடையின் முதுகையும், எதிர்ப்பக்கம் வாசலையும் வைத்து வியாபாரம் செய்யும் டெக்னிக்கையும் டாஸ்மாக் நிறுவனம் கண்டுபிடித்து செயல்படுத்தியது.

 

"மக்கள் விழிப்புணர்வுமைய' பொறுப்பாளர் நெய்வேலி செல்வமோ, இந்த ஆண்டு டாஸ்மாக் வியாபாரம் 600 கோடி ரூபாய்க்கு என்று சொன்னால், அதில் தமிழக அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் வருமானம் இருந் திருக்கும்? இதில் மதுபான அதிபர்கள் எத்தனை கோடி ரூபாய் லாபம் சம்பாதித் திருப்பார்கள்? அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக டாஸ்மாக்கை அனுமதிப்பதாகச் சொல்லும் அரசு, டாஸ்மாக்கை நடத்துவது போலவே, மதுபான ஆலையையும் நடத்தி அதன் மூலம் முழு லாபத்தையும் பார்க்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை?

 

இன்று டாஸ்மாக் வியாபாரம் அதிகரிக்கிறது என்றால் நாம் சந்தோசப்படாமல் வெட்கப்படவேண்டும். இது அரசுக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஏனென்றால் இன்று மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி உழைக்கும் பெண்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அதோடு குடியால் குற்றங்களும் பெருகி வருகின்றன. இதற்கெல்லாம் அனுசரணையாக இருப்பது அரசு நடத்தும் டாஸ்மாக்தான். இவர்கள் ஒரு சமூகத்தையே சீரழித்து விட்டுதான் அரசாங்கத்தை நடத்தவேண்டுமா?'' என்று காட்டமாகவே கேட்கிறார்.

 

"டாஸ்மாக் விற்பனையால் அரசுக்குக் கிடைக்கும் லாபம் என்பது, பாவத்தின் சம்பளம் என்பதை உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?' என்ற கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்காது. ஏனென்றால், "கரோனா காலத்தில் ஏற்பட்ட அரசின் வரி இழப்புகளை சரிக்கட்டுபவை பத்திரப் பதிவுகளும், டாஸ்மாக் வியாபாரமும்தான்' என்று அரசே புள்ளிவிவரம் வெளியிட்டு வருகிறது.