Devotees use ropecar service in Palani

பழனி முருகன் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.

Advertisment

இதனையடுத்து ரோப் கார் சேவையை மீண்டும் தொடங்குவதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ரோப் கார் சேவை கடந்த 19.08.2023 முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று நாளை (08.10.2023) முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என்ற விபரம் பக்தர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக 50 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று (08.10.2023) மீண்டும் தொடங்கப்பட்டது. ரோப் காரில் புதியதாக இயந்திரங்கள் கயிறுகள் பொருத்தப்பட்டு சேவைகள் துவங்கி உள்ளன. முன்னதாக பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் ரோப் கார்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.