Skip to main content

தஞ்சையில் அனுமதிக்கப்படும் பக்தர்கள், திருவண்ணாமலையில் அனுமதிக்கப்படாதது ஏன் ? –பக்தர்கள் கேள்வி

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Devotees allowed in Tanjore, why not allowed in Thiruvannamalai? - Devotees question

 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புகழ்பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் பௌர்ணமி மட்டுமல்லாமல் அமாவாசைக்கு முன்பு வரும் பிரதோஷம், பௌர்ணமிக்கு முன்புவரும் பிரதோஷம் நாட்களில் நந்திக்கு செய்யும் அலங்காரம், பூஜை பிரசித்தி பெற்றது. இதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

 

கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கோயில்கள் திறக்கவில்லை. ஆகமவிதிப்படியான கோயில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் பூஜைகள் மட்டும் நடந்துவந்தன. பிரபல கோயில்களின் பூஜைகள், திருவிழாக்களை, ஆன்லைனில் ஒளிப்பரப்பினர். செப்டம்பர் முதல்வாரம் முதல் கோயில்கள் அனைத்தும் தமிழகத்தில் திறக்கப்பட்டன. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற விதியை கடைப்பிடித்து கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

தஞ்சாவூர் பெரிய கோயில் உட்பட சில முக்கிய கோயில்களில் பிரதோஷம் நாட்களில் நந்திக்கு அலங்காரம் செய்வது, பூஜை செய்வதை காணவரும் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் நிற்க வைத்து அலங்காரம் செய்வது, பூஜை செய்வதை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவண்ணாமலை உட்பட பல கோயில்களில் அப்படி செய்வதில்லை. பிரதோஷத்தன்று பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் பக்தர்கள் தரப்பில் இருந்து வைக்கப்படுகிறது.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செப்டம்பர் 29ஆம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு அலங்காரம், அபிஷேகம், பூஜை போன்றவை நடைபெற்றது. இதனை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதன் அருகே சென்று தரிசனம் செய்யவும் அனுதிக்கவில்லை.

 

இதுகுறித்து அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் நம்மிடம், “கருவறையில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருவறைகள் என்பது சிறியது, அதன் அருகே பக்தர்கள் அமர்ந்து அபிஷேகத்தை பார்க்கும் அறையும் சிறியது, அதனால் அங்கு அமர்வு தரிசனத்துக்கு அனுமதித்தால் நோய் பரவும். அதனால், அதனை ரத்து செய்ததை வரவேற்கிறோம். பிரதோஷம் என்பது நந்திக்கானது. நந்தி கோயில் பிரகாரத்தில் வெளியே இருக்கும். இதற்கான அலங்காரம் மற்றும் பூஜை செய்வதை பக்தர்கள் சாதாரணமாக தரிசனம் செய்ய வைக்கலாம். பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்து அதனை பார்க்கப்போகிறார்கள். இதனால் நோய் பரவுதல் என்பது குறைவு. ஆனால், திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அரசின் விதிகளை காரணம் காட்டி பக்தர்கள் அதனை நின்று பார்க்க அனுமதிக்க மறுக்கிறது. தஞ்சை பெரிய கோயிலில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கவைத்து தனித்தனியே நந்தி முன் உட்கார வைத்து பிரதோஷ வழிப்பாட்டை காணவைத்தார்கள். அவர்களுக்கு அந்த விதி பொருந்தாதா” என கேள்வி எழுப்பினார்கள். அடுத்து வரும் பிரதோஷத்திலாவது பக்தர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து அலங்காரம், பூஜை போன்றவற்றை காண ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.