Skip to main content

மீண்டும் அனலடிக்கும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி!  பெண் ஊழியர்கள் போர்க்கொடி!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
nirmala devi

 

 

பேராசிரியை நிர்மலாதேவி பணிபுரிந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது. தனலட்சுமி என்பவர் கடந்த  13 வருடங்களாக அந்தக் கல்லூரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.  தன்னைப் பணியில் நிரந்தரமாக்குவதற்காக ரூ.5 லட்சத்தை அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமியிடம் கொடுத்ததாகவும், சொன்னபடி அவர் நடந்துகொள்ளாமல், புதிதாக வந்தவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு, போஸ்டிங் போட்டுவிட்டதாக புகார் வாசிக்கிறார் அவர்.   இதேரீதியில், மகாதேவி என்பவரும் புலம்புகிறார். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, கல்லூரி வராண்டாவில் இன்று உட்கார்ந்துவிட்டார் தனலட்சுமி.  அவரோடு சேர்ந்து கொண்டனர் மகாதேவியும் உறவினர்கள் இருவரும். 



முதலில் நிர்மலாதேவியின் பெயரைக் குறிப்பிட்ட தனலட்சுமி “எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை அவங்க பொண்டாட்டி பிள்ளைகளுக்கு போட்டுக் கொடுத்திருக்காங்க. இது எந்த விதத்தில் நியாயம்?   போஸ்டிங் போடலைன்னா, காலேஜ் பேரை அசிங்கப்படுத்திருவேன்.” என்று குமுறலாகச் சொன்னார். 


பழைய கமிட்டி மெம்பர்கள் ராமசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் “தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் வசூலித்த ரூ.36 லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார் செயலாளர் ராமசாமி. இன்றுவரையிலும், அந்தப் பணத்தை எடுத்துத்தரவில்லை.” என்று குற்றம் சாட்டுகிறார். 


கல்லூரியின் செயலாளர் ராமசாமியோ “போஸ்டிங்குக்கு யாரிடமும் நான் பணம் வாங்கவில்லை. தேவையில்லாமல் என் மீது பழிபோடுறாங்க.  சிலருடைய தூண்டுதல்ல இவங்க பிரச்சனை பண்ணுறாங்க.” என்றார். நிர்வாகக் குளறுபடிகளால் கல்லூரியின் பெயர் மேலும் கெடுகிறது என்று வருத்தப்படுகிறது மாணவர்கள் தரப்பு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.