சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?', 'வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்' என்ற பதாகைகளை கையில் வைத்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில் குறைகளை அங்கு தெரிவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை அனுப்பி வைத்தனர்.